;
Athirady Tamil News

உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் படைகளை அனுப்புவது போராக முடியும்: புதின் எச்சரிக்கை

0

உக்ரைனில் ஐரோப்பிய படைகள் நிலைநிறுத்தப்படுவது ரஷியா உடனான போருக்கு வழிவகுக்கும் என ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தில்லியில் நடைபெறும் 18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்து உரையாடி வருகிறார்.

இந்த நிலையில், செய்தியாளர்களுடன் இன்று (செப். 12) பேசிய அதிபர் புதின், ஐரோப்பிய நாடுகள் உடன் மோதல்களை விரும்பவில்லை என்றும்; ஆனால், உக்ரைனில் ஐரோப்பிய படைகள் நிலைநிறுத்தப்படுவது ரஷியா உடனான போருக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

“நாங்கள் (ரஷியா) ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தவில்லை. இனி அச்சுறுத்தவும் போவதில்லை. நாங்கள் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஐரோப்பிய நாடுகளுடன் மோதல்களைத் தொடங்க எங்களுக்கு எந்தவொரு காரணமும் இல்லை என்பதை யாரும் கருத்தில் எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை.

ஆனால், இப்போது அவர்கள் (ஐரோப்பிய நாடுகள்) உக்ரைனில் தங்களின் படைகளை நிலைநிறுத்துவது குறித்து சிந்திப்பதாகக் கூறுகின்றனர். இதன் பொருள் ரஷியா உடன் போர் என்பதாகும்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷியா தொடுத்துள்ள போரில், ஏராளமான ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. மேலும், இந்தப் போரில் இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படுவதாக அமெரிக்க அரசு கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.