;
Athirady Tamil News

அமெரிக்காவில் பயங்கரம்: 2 தோழிகளை கொலை செய்த கேரள இளம்பெண்

0

அமெரிக்காவில் கேரளாவை சேர்ந்த 2 தோழிகளை கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்

கேரளாவை சேர்ந்த தோழிகள்

கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர் அஞ்சனா ஹரி (வயது 35). திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மேரி மேத்யூ (வயது 35). கோட்டயத்தை சேர்ந்தவர் அனிலா பேபி (வயது 32). தோழிகளான 3 பெண்களும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடும்பத்தினருடன் தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

அனிலாவும், அஞ்சனாவும் கலிபோர்னியாவின் மில்பிடாஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அருகருகே வசித்து வந்தனர். மேரி மேத்யூ சன் ஜோஷி நகரில் வசித்து வந்தார். தோழிகளான 3 பேரும் கடந்த 26ம் தேதி ஓணம் பண்டிகையை கலிபோர்னியாவில் ஒன்றாக கொண்டாடியுள்ளனர்.

 

கத்தியால் குத்திக்கொலை

இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி கலிபோர்னியாவின் சன் ஜோஷி நகரில் உள்ள மேரி மேத்யூ வீட்டிற்கு அனிலா பேபி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற அனிலா பேபி தான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் தோழி மேரி மேத்யூவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மேரி மேத்யூ வீட்டிலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, காரில் புறப்பட்ட அனிலா பேபி அங்கிருந்து சில கிலோ மீட்டர் பயண தூரத்தில் மில்பிடாஸ் நகரில் உள்ள தனது குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளார். அதே குடியிருப்பில் தனது மற்றொரு தோழி அஞ்சனா ஹரி தங்கியுள்ள நிலையில் கார் பார்க்கிங் பகுதிக்கு வருமாறு அவரை செல்போனில் அழைத்துள்ளார்.

கார் ஏற்றிக்கொலை

இதனை தொடர்ந்து அஞ்சனா ஹரி வீட்டில் இருந்து கார் பார்கிங் பகுதிக்கு தனது தோழி அனிலா பேபியை பார்க்க சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த அனிலா பேபி காரை வேகமாக இயக்கி அஞ்சனா ஹரியை மோத செய்துள்ளார். இதில் காரில் மோதி தூக்கி வீசப்பட்ட அஞ்சனா ஹரி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

கைது

இந்த இரட்டை படுகொலை குறித்து தகவலறிந்த போலீசார், காரில் தப்பியோடிய அனிலா பேபியை தீவிரமாக தேடி வந்தனர். தீவிர தேடுதலுக்குப்பின் 2 தோழிகளையும் படுகொலை செய்த அனிலா பேபி மில்பிடாஸ் நகரில் இருந்து 1.6 கிலோ மீட்டர் தொலைவில் மெடிக்கல் ஷாப் அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டார். காரில் இருந்த அனிலா பேபியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இரட்டைக்கொலைக்கான காரணம்? – விசாரணை

இதையடுத்து, 2 தோழிகளையும் கொலை செய்ததற்கான காரணம் குறித்து அனிலா பேபியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தோழிகளுக்கு இடையே ஓணம் பண்டிகையின்போது கருத்து வேறுபாடு நிலவியதாகவும் அதன் காராணமாக இந்த இரட்டை கொலை அரங்கேறியிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட 2 இளம்பெண்களையும் கேரளாவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அமெரிக்காவில் கேரளாவை சேர்ந்த தோழிகள் 2 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.