;
Athirady Tamil News

வெளியிடப்படாத நவாஸ் ஆணைக்குழு அறிக்கை ஏற்புடைய உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முக்கியமானதாக அமையலாம்!

0

மூன்று தசாப்த காலப் போரின் விளைவாக தோன்றிய மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நிறுவப்படும் என்று அண்மையில் வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

அது தொடர்பான சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகள் அனேகமாக பூர்த்தியடைந்துவிட்டதாகவும் போர்க் குற்றங்களுக்காக வழக்கு தொடுப்பதற்கான அதிகாரத்தை உத்தேச ஆணைக்குழுவுக்கு வழங்கவேண்டுமா அல்லது விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து அந்த அதிகாரத்தை அதனிடம் கொடுக்கவேண்டுமா என்பதே தீர்மானிக்க வேண்டியிருக்கும் எஞ்சிய முக்கிய விடயமாகும்.

“உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நீதித்துறை அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டுமா அல்லது அந்த ஆணைக்குழுவின் விதப்புரைகளை அடிப்படையாகக் கொண்டு விசேட நீதிமன்றத்தை அமைக்கவேண்டுமா என்பது குறித்து நாம் ஆராய்ந்து வருகிறோம். இது தொடர்பிலான தீர்மானம் அதிமுக்கியமானது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தூதுவர்கள் ஆலோசனை கலந்து பாராளுமன்றத்தின் பரிசீலனைக்காக சட்டமூலமொன்றை வரையுமாறு நான் சம்பந்தப்பட்ட அமைச்சர்களைக் கேட்டிருக்கிறேன்” என்று ஜனாதிபதி கூறினார்.

இது விடயத்தில் தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உதாரணம் பின்பற்றக்கூடியதாகும். தென்னாபிரிக்காவில் அந்த ஆணைக்குழுவை அமைத்தபோது அதற்குரிய ஆணை, உறுப்பினர்கள் நியமனம் ஆகியவற்றை தீர்மானிப்பதற்கு கடைப்பிடிக்கப்பட்ட செயன்முறை ஒளிவுமறைவு இல்லாததாக இருந்தது.

அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூகம் மற்றும் மத அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சுயாதீனமான தெரிவுக்குழு ஒன்றினால் நாடு பூராவும் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு பகிரங்க நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டு உகந்த ஆலோசனை செயன்முறையின் ஊடாகவே தெனானாபிரிக்காவில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

இலங்கையில் கலந்துரையாடல் செயன்முறைகளை பொறுத்தவரை பல முக்கியமான முயற்சிகள் ஏற்கெனவே செயற்படுத்தப்பட்டிருந்தன. 2011இல் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினதும் 2016இல் கலந்தாலோசனைச் செயலணியினதும் ஆய்வு முடிவுகளில் அவை ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

முன்னைய ஆணைக்குழுக்களினதும் குழுக்களினதும் ஆய்வு முடிவுகளையும் விதப்புரைகளையும் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கடந்த 2021 ஜனவரியில் நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆய்வுமுடிவுகளை இவ்விடயத்தில் அரசாங்கம் பரிசீலிப்பது உகந்ததாக இருக்கும். கடந்த காலத்தைக் கையாள்வது தொடர்பிலான கேள்விகளுக்கு பதில்களை அந்த ஆய்வு முடிவுகளில் கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கலாம்.

2023 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட நவாஸ் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் சுருக்கத்தொகுப்பில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளடைவில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்போது அத்தகைய ஆணைக்குழுவின் தோற்ற அமைப்பு குறித்து விபரங்கள் விளக்கமாகத் தரப்படும் என்று அந்த சுருக்கத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

2024 ஜனவரியில் நவாஸ் ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தது. யாழ்ப்பாணத்தில் உரையாற்றும்போது நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கையைப் பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி,

“முன்னோக்கிச் செல்வதற்கு நாம் நல்லிணக்க முயற்சிகள், காணாமல்போனோர் தொடர்பிலான கரிசனைகளை கையாளுதல், இழப்பீடு வழங்குவதற்கும் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கும் பொறிமுறைகளை வகுத்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். இந்த பிரச்சினைகள் சகலவற்றையும் நாம் கையாளவேண்டிய நேரம் இதுவே என்று நின் நினைக்கிறேன்” என்று கூறினார்.

நவாஸ் ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை அரசாங்கம் பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்தை இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

அவ்வாறு செய்வதன் மூலமாக அந்த ஆணைக்குழுவின் ஆய்வு முடிவுகளையும் விதப்புரைகளையும் மக்கள் அறிந்து மதிப்பீடு செய்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றுடன் தொடர்புைடைய பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் இலங்கையில் நிலைபேறான சமாதானத்தையும் நீதியையும் நிறுவுவதற்கு பங்களிப்பைச் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.