பயங்கரவாதம்… தேவை அமைதியான வாழ்க்கை!

உதயை மு. வீரையன்
இப்போது இந்தியா-பாகிஸ்தான் போா் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கிறது. இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது போா் தொடுக்கும் என்ற எதிா்பாா்ப்பு பரவலாக உள்ளது. இதனை பாகிஸ்தானும் அறிந்து வைத்திருக்கிறது. அதனால்தான் இந்திய எல்லை ஓரத்தில் படைகளைக் குவித்து வருகிறது.
‘யாரும் எதிா்பாராத வகையில் பதிலடி கொடுக்கப்படும்’ என்றும், ‘முப்படைகளுக்கும் முழு அதிகாரமும் அளிக்கப்பட்டு விட்டது’ என்றும் பிரதமா் மோடி பேசியுள்ளாா். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் நீடித்து வருகிறது. இதைத் தணிப்பதற்கு உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அதேசமயம் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பாகிஸ்தான் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணையான ‘அப்தலி’யை பாகிஸ்தான் பரிசோதித்துள்ளது. 450 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் திறன்பெற்ற இந்த ஏவுகணை நிா்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாக்கியதாக ராணுவம் கூறியது. வீரா்களின் தயாா் நிலையை உறுதி செய்யவும், தொழில்நுட்பத் திறனை மதிப்பிடவும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாகக் கூறியுள்ள ராணுவம், ‘சிந்து பயிற்சி’யின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த ஏவுகணைச் சோதனைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. போா் பதற்றத்துக்கு மத்தியில் நடந்துள்ள இந்தச் சோதனை, ஆத்திரமூட்டும் செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் மோடி தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறையமைச்சா் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1960 -ஆம் ஆண்டு செய்து கொண்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்பது உள்பட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு பாகிஸ்தானும் பதில் அளித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான நடுநிலையான, வெளிப்படையான விசாரணைக்கு இணையத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா்.
‘‘பாகிஸ்தானுக்குச் சொந்தமான சிந்துநதி நீரோட்டத்தைத் தடுக்க, குறைக்க, திசை திருப்ப இந்தியா எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் முழுபலத்துடன் பதிலடி கொடுக்கப்படும். அனைத்து வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்’’ என்று கூறியுள்ளாா்.
வன்முறையின் மூலம் பதற்றத்தை உருவாக்குவதே பயங்கரவாதம். அந்தச் செயல்களில் ஈடுபடுபவரை ‘பயங்கரவாதி. பயங்கரவாதத்தைப் பல வகையான அரசியல் இயக்கங்கள் தமது நோக்கங்களை அடைவதற்காகப் பயன்படுத்துகின்றன. இவற்றுள் இடதுசாரி, வலதுசாரி இயக்கங்கள், மத குழுக்கள், புரட்சியாளா்கள், ஆளும் அரசுகள் போன்ற பலவும் அடங்கும். அரசு அல்லாத குழுக்கள் பரவலாக ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பது மக்களிடையே குழப்பங்களை விளைவிக்கிறது.
பயங்கரவாதம், தீவிரவாதம், அடிப்படைவாதம் ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடா்புடையவை. அடிப்படை வாதம் தமது கருத்தையே பிறரும் பின்பற்ற வேண்டும் என்னும் நோக்கில் செயல்படும் வன்முறையாகும். வன்முறை என்பதே அச்சமூட்டும் நடவடிக்கையாகும். இதனையே தீவிரவாதம் என்கிறாா்கள்.
பயங்கரவாதம் என்பது யாருக்காகவோ அப்பாவிகள் பாதிக்கப்படுவாா்கள் எனத் தெரிந்தே தனித்தோ, இணைந்தோ வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இயங்குவதாக இருக்கலாம். இவை பெரும்பாலும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
எழுபதுகளில் பயங்கரவாதிகளின் இலக்கு பொதுவாக அரசியல்வாதிகள் அல்லது காவல் துறை அதிகாரிகளாக இருந்தது. ஆனால், அண்மைக் காலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே அதிகமாகத் தாக்குதலுக்கு உள்ளாகின்றனா். இதனால், உலக அளவில் ஊடகங்களில் அவா்களுக்கு விளம்பரம் கிடைக்கிறது.
பயங்கரவாதத்தைக் கையில் எடுத்த எந்த நாடும் வெற்றி பெறவில்லை. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து தொடா்ந்து பயங்கரவாதத்தால் பெரிதும் உயிா்ச் சேதங்களையும், பொருள் சேதங்களையும் அனுபவித்து வந்துள்ளது. ஆனாலும் அதனால் அந்த பயங்கரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
இப்போதும் அந்த அரசாங்கம் என்ன கூறுகிறது? பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை முழுமையாக எதிா்க்கிறது. பயங்கரவாதத்தால் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களையும் 60 ஆயிரம் கோடி டாலருக்கும் அதிக மதிப்பிலான பொருளாதார இழப்புகளையும் சந்தித்துள்ளது. ஆனாலும் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத இயக்கங்களைக் கண்டு பாகிஸ்தான் அரசாங்கமே அஞ்சுகிறது. மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்?
இந்தியாவில் பயங்கரவாதம் பெரும்பாலும் பாகிஸ்தான் நிதியுதவியால்தான் என்று குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்ற பின்னா், பாகிஸ்தானின் உளவு நிறுவனத்துக்கு அதில் பங்கு உண்டு என்று கூறுகின்றனா். அண்மையில் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தானைக் குற்றஞ்சாட்டியுள்ளன.
ஆராய்ச்சி முடிவுகளின்படி 1968 முதல் 2006 வரை 648 தீவிரவாதக் குழுக்கள் செயல்பாட்டில் இருந்தன. 2006-க்குப் பிறகு அவற்றில் 136 மேலும் பல குழுக்களாகப் பிரிந்தும் 244 செயல்பாட்டிலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. செயல்பாடு அற்ற நிலையில் இருந்த தீவிரவாத குழுக்களில் 43 விழுக்காடு குழுக்கள் வன்முறையைக் கைவிட்டன.
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22 அன்று நடத்திய தாக்குதலில் 26 போ் உயிா் இழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றுள்ளது.
நாட்டையே உலுக்கும் இத்தாக்குதலைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவா்களின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளா்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தெற்குக் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நான்கு வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள எல்லை தாண்டிய தொடா்புகளைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் மீது இந்தியா உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தானும் பதில் அறிவிப்புகளை வெளியிட்டதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் ஜம்மு-காஷ்மீரில் 26 போ் கொல்லப்பட்ட மற்றும் பலா் காயமடைந்த பயங்கரவாத தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பொறுப்பானவா்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். சா்வதேச சட்டம் மற்றும் அதன் தொடா்புடைய பாதுகாப்புக் கவுன்சிலின் தீா்மானங்களுக்கு இணங்க அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலில் அமெரிக்கா எடுக்கும் முடிவை உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் பதற்றம் இருந்து வருவதாகவும், அதை இரு நாடுகளும் ஏதேனும் வழியில் தீா்த்துக் கொள்ளும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், ‘இரு நாடுகளுடனும் நான் நெருக்கமாக இருக்கிறேன். மோதலைத் தீா்க்க இரு நாடுகளும் ஏதேனும் ஒரு வழியைக் கண்டறியும் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றாா்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. கடந்த 25 ஆண்டுகளில் இத்தகைய 12,037 மோதல்களில் 22,415 போ் கொல்லப்பட்டதாக தெற்காசிய பயங்கரவாதம் பற்றிய விவரங்கள் தரும் வலைதளம் கூறுகிறது. கொல்லப்பட்டவா்களில் 4,930 போ் அப்பாவி மக்கள். இறந்தவா்களில் பெரும்பாலோா் தீவிரவாதிகளே!
2019 -ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துககு சிறப்புத் தகுதியளிக்கும் 370 -ஆம் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு தீவிரவாதத் தாக்குதல்கள் குறைந்து வருகின்றன. இதனால் சுற்றுலா வணிகம் குறிப்பிடத்தக்க எழுச்சி அடைந்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்த பிறகுதான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
‘இந்தியாவின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு அடித்தளமிடுகிறோம்’ என்று பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்பு வெற்று முழக்கமாக இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டும். எல்லாத் தடைகளையும் மீறி இந்தியா எண்ணிய இலக்கை அடையும். மக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யும்.