;
Athirady Tamil News

கேரளாவில் பரிசோதனை செய்யும் 2 பேரில் ஒருவருக்கு கொரோனா- சுகாதார துறை மந்திரி எச்சரிக்கை…!!!

0

கேரளாவில் கொரோனாவின் 3-வது அலையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 55 ஆயிரத்து 475 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் தொற்று சதவீதம் 49.40 ஆக உயர்ந்துள்ளது.

இது சுகாதார துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:-

கேரளாவில் நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 2-ல் ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்திருப்பதும் இப்போதுதான் நடந்துள்ளது.

கொரோனா பரிசோதனை

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் உள்ளனர். நோய் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அவர்கள் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன. சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அரசியல், மத, கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.