;
Athirady Tamil News

முதலீடுகளையும் ஒத்துழைப்புக்களையும் வரவேற்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ்!!

0

நிலைபேறான அபிவிருத்தியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கழையும் முதலீடுகளையும் உலக வங்கி போன்ற அமைப்புக்களிடம் இருந்து வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஆழ்கடல் மீன்பிடி மற்றும் நீர்வேளாண்மை துறைகளில் மேற்கொள்ளக்கூடிய நிலையான அபிவிருத்தி முகாமை தொடர்பாக உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

கொழும்பு, ஷங்கரில்லா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,

“இலங்கையின் கடற்றொழில் மற்றும் நன்னீர், பருவகால மீன் வளர்ப்பு, கடலட்டை வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை சார்ந்த வளங்களை அடையாளப்படுத்தி ஒருங்கிணைப்பதன் மூலம் நிலைபேறான பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவது தொடர்பான பல திட்டங்களும் பொறிமுறைகளும் கடற்றொழில் அமைச்சிடம் காணப்படுன்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிநடத்தலில், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனைகளுடன் திட்டமிடப்பட்டுள்ள குறித்த பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களையும் முதலீடுகளையும் உலக வங்கி போன்ற அமைப்புக்ளிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்” என்று தெரிவித்தார்.

மேலும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச அமைப்புக்களின் எதிர்பார்ப்புக்களையும் சர்வதேச நியமங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் பலநாள் மீன்பிடிக் கலன்களின் தொழில்முறைகள் உட்பட கடற்றொழில்சார் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புதிய ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, நன்னீர் மற்றும் பருவகால மீன்வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை மூலம் தற்போது மொத்த மீன் உற்பத்தியில் 17 வீதத்தித்தினை பெற்றுக்கொள்வதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் மொத்த உற்பத்தியில் சுமார் 30 வீத உற்பத்தியை நீர்வேளாண்மை ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை , சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற கடலட்டை பண்ணைகளை உருவாக்குவதிலும் கடற்றொழில் அமைச்சு மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 கடலட்டை கிராமங்கள் ஊடாக சுமார் 355 பண்ணைகளை உருவாக்கியுள்ளமையையும், யாழ் மாவட்டத்தில் 19 கடலட்டை ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்கி சுமார் 467 பண்ணைகளை உருவாக்கி இருக்கின்றமையையும் சுட்டிக்காட்டியதுடன் ஆழ்கடல் மீன் பிடியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மயிலிட்டித் துறைமுகம் உள்ளிட்ட துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதையும், பருத்தித்துறை, குருநகர், பேசாலை போன்ற தேவையான பிரதேசங்களில் புதிய துறைமுகங்களை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் தெளிவுபடுத்தியிருந்தமை இருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.