;
Athirady Tamil News

குறு, சிறு, நடுத்தர தொழில்துறையை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்படுகிறது- பிரதமர் மோடி..!!

0

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த தொழில் முனைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் ரூ.6 ஆயிரம் கோடி செலவிலான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செயல்திறன் அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல் திட்டம், முதல் முறை ஏற்றுமதி செய்யும் குறு, சிறு, நடுத்தர தொழில்களின் திறன் மேம்பாட்டு திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தில் புதிய அம்சங்களை தொடங்கி வைத்தார். 2022-23-ம் ஆண்டுக்கான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்ட பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். 2022-ம் ஆண்டுக்கான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேசிய விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை வலுப்படுத்த கடந்த 8 ஆண்டுகள் எங்களது அரசாங்கம் பட்ஜெட்டை 650 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தியுள்ளது. இந்தியாவில் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் தயாரிப்புகள் புதிய சந்தைகளை அடைய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை வலுவாக இருப்பது மிகவும் முக்கியம். இத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் மிகப்பெரிய தூண். நாட்டின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை இத்துறை கொண்டுள்ளது. இந்தியா இன்று ரூ.100 சம்பாதிக்கிறது என்றால் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையால் ரூ.30 வருகிறது. உங்களது தயாரிப்புகளை அரசுக்கு விநியோகம் செய்ய அரசு மின்-சந்தையில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். ரூ.200 கோடி வரையிலான ஆர்டர்களுக்கு உலகளாவிய டெண்டர் எடுக்கப்பட மாட்டாது என்ற முடிவை எடுத்துள்ளோம். இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பதை உறுதி செய்ய குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு இட ஒதுக்கீடு ஆகும். நாடுகளுடனான ஈடுபாட்டின் 3 தூண்கள் வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா ஆகியவை ஆகும். ஒவ்வொரு மாவட்டத்திலும், பகுதியிலும் தனித்துவமாக உள்ளூர் உற்பத்தியை உலக அளவில் உருவாக்க முடிவு செய்துள்ளோம். குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தி நட வடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் காதி விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. முதல் முறையாக காதி மற்றும் கிராம தொழில்களின் விற்பனை ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கிராமங்களில் உள்ள சிறு தொழில்முனைவோர் சகோதரிகள் கடுமையாக உழைத்ததால் இது சாத்தியமானது. இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.