;
Athirady Tamil News

ரூ.1.78 கோடியை உடன் கையளிக்கவும் !!

0

ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்களால், அங்கிருந்து கைப்பற்றப்பட்டு கையளிக்கப்பட்ட 17.8 மில்லியன் (1.78 கோடி) ரூபாயை உடனடியாக நீதிமன்றத்தில் கையளிக்குமாறு, கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, நேற்று (28) கட்டளையிட்டார்.

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதியன்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து 17.8 மில்லியன் ரூபாய் பணம் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டதாக கோட்டை பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

பொலிஸாரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும் அது தொடர்பான அறிக்கை எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதவான் குறித்த பணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் கையளிக்குமாறு கட்டளையிட்டார்.

அதுமட்டுமின்றி பணம் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரையும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

ஜனாதிபதி மாளிகையில் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தவர்களில், குறித்த நான்கு சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.