;
Athirady Tamil News

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து இந்தியா கடும் அதிருப்தி!!

0

அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப்பிரச்சினைக்கு உரியவாறான அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எவையும் எட்டப்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய இந்தியா, மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மாகாணசபைத்தேர்தல்கள் விரைவாக நடாத்தப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது.

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 17 பக்க எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பினால் வாசிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

அதன்படி அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப்பிரச்சினைக்கு உரியவாறான அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பூர்த்திசெய்வதில் குறிப்பிடத்தக்களவிற்கு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் இந்தியா சார்பில் உரையாற்றிய பிரதிநிதி கரிசனையை வெளிப்படுத்தினார்.

மேலும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான நீதி, சமாதானம், சமத்துவம் மற்றும் சுயகௌரவம் ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடியவாறான அரசியல் தீர்வை வழங்குவதே இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடாக இருந்துவருகிறது என்று குறிப்பிட்ட அவர், தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியானது கடன்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் பொருளாதாரத்தின் மட்டுப்பாடுகள் மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்பவற்றைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மாகாணசபைத்தேர்தல்கள் விரைவாக நடாத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்ட இந்தியப்பிரதிநிதி, அதன்மூலம் அனைத்து இலங்கையர்களாலும் சுபீட்சமான எதிர்காலத்தை முன்னிறுத்திய தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளமுடியும் என்றும், எனவே இவ்விடயத்தில் இலங்கை உடனடியானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.