;
Athirady Tamil News

சித்தூர் அருகே இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்..!!

0

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காவரம் அருகே உள்ள கிராமங்களில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. டி.வி, பிரிட்ஜ், கட்டில் லேசாக ஆடியது. அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கிராம மக்கள் அலறி எழுந்தனர். அவர்கள் உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். 15 நிமிடத்தில் அடுத்தடுத்து 3 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். வருவாய்த்துறையினர் மற்றும் அதிகாரிகள் நிலநடுக்கம் ஏற்பட்ட கிராமங்களுக்கு சென்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றனர். மேலும் நிலநடுக்கத்தை பதிவு செய்யும் கருவியை அந்தந்த கிராமங்களில் பொருத்திவிட்டு வந்தனர். இன்று அதிகாலை நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் எவ்வளவு பதிவாகி உள்ளது என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே சித்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.