;
Athirady Tamil News

2014ல் இருந்து பள்ளி செல்லும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது – மத்திய மந்திரி தகவல்..!!

0

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பாராளுமன்ற வாளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள மருத்துவர்களின் தேவையை நிறைவேற்றவும், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலே படிப்பதற்கு மோடி அரசு முயற்சி எடுத்து வருகிறது. நாட்டில் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 87 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு 53 ஆயிரம் இடங்களாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்கள் தற்போது 96 ஆயிரமாக உயர்ந்துள்ளன. அதே வேளையில், முதுகலை மருத்துவ இடங்கள் 31 ஆயிரத்தில் இருந்து 63 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது 105 சதவீதம் அதிகமாகும். 2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகள் 2022-ல் 648 ஆக உயர்ந்துள்ளன. புதிய கல்விக் கொள்கை மாநிலங்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரிடையேயும் பாராட்டை பெற்று வருகிறது. கொரோனா காலத்தில் கூட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. 2014-ம் ஆண்டில் இருந்து பள்ளி செல்லும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது. பள்ளிகளில் இருந்து மாணவிகளின் இடைநிற்றலை தடுப்பதில் கழிவறைகள் முக்கிய பங்காற்றியுள்ளன. 2.5 லட்சம் பள்ளிகளில் சுமார் 4.5 லட்சத்திற்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக இடைநிற்றல் விகிதம் 17 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாகக் குறைந்துள்ளது என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.