;
Athirady Tamil News

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தொற்று பரவல் குறைந்ததையடுத்து குறைந்த அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் கொரோனா 2-வது அலை தொடங்கியதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, இலவச தரிசனம், ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மற்றும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை, சுப்ரபாத சேவை உள்ளிட்ட சேவைகள் மூலம் தினமும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு திருப்பதி தேவஸ்தானத்திற்கு மாதத்திற்கு ரூ.120 கோடி முதல் 130 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று வைத்திருக்க வேண்டும் அல்லது தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் நேற்று 62, 055 பேர் தரிசனம் செய்தனர்.23, 044 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.99 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.