;
Athirady Tamil News

திருப்பதியில் 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் !!

0

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 4 நாட்களாக பக்தர்களின் வருகை குறைவாக இருந்ததால் அறைகளில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

உண்டியல் வருவாயும் குறைந்த அளவிலேயே வசூல் இருந்தது. நேற்று காணும் பொங்கலையொட்டி அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். 26 அறைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று காலையும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் தரிசனத்திற்கு இன்னும் பல மணி நேரம் கூடுதலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று சுமார் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 74,236 பேர் தரிசனம் செய்தனர். 27,269 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.