;
Athirady Tamil News

கடும் வெப்ப அலை; ஜேர்மனியில் 5,000 பேர் உயிரிழப்பு!

0

ஜேர்மனியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடும் வெப்ப அலை காரணமாக மதிப்பிடப்பட்ட 5,120 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் புகழ்பெற்ற ரொபர்ட் கோக் பொதுச் சுகாதார நிறுவனம் நேற்று (09) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இதில் பெரும்பாலான மரணங்கள் ஜூன் மாதத்தின் பிற்பகுதியில், வாராந்த சராசரி வெப்பநிலை வழமைக்கு மாறாக 20 டிகிரி செல்சியஸைக் (20°C) கடந்த போதே நிகழ்ந்துள்ளன. உயிரிழந்தவர்களில் சுமார் 4,270 பேர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்கள் என ரொபர்ட் கோக் நிறுவனம் தனது வாராந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜேர்மனியின் மிக வயதான மக்கள் தொகை

உயிரிழந்தவர்களில் ஆண்களை விடப் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகும். ஜேர்மனியின் மிக வயதான மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் அதிகமாக இருப்பதே இதற்குக் பிரதான காரணமாகும்.

ஜேர்மனியின் இந்தத் தரவுகள் ஒட்டுமொத்த ஐரோப்பிய பிராந்தியமும் எதிர்கொண்டுள்ள மிக மோசமான தட்பவெப்ப நிலையைப் பிரதிபலிக்கின்றன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் தங்களது வரலாற்றிலேயே மிக வெப்பமான ஜூன் மாதத்தை இந்த ஆண்டு எதிர்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘கொப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை’ இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அங்கு ஜூன் மாதத்தின் சராசரி வெப்பநிலை 20.74 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. ஜூன் 20 முதல் 28 ஆம் திகதி வரையிலான குறுகிய காலப்பகுதியில் நிலவிய கடுமையான வெப்ப அலையினால் பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் 4,700 க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்தந்த நாட்டு தேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய காலநிலை மாற்றத்தின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடைகாலத்தில் கடுமையான வெப்ப சவால்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.