;
Athirady Tamil News

தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைக்காத அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் – தேர்தல் ஆணைக்குழுவிடம் பெப்ரல் வலியுறுத்தல்!!

0

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை திட்டமிட்ட படி நடத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் , அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றத்தவறிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பெப்ரல் அமைப்பினால் தேர்தல் ஆணைக்குழுவின் உள்ளிட்ட அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

மார்ச் 9ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்கு உரிய முறையில் முன்னெடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் , இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அரச அதிகாரிகள் வெ வ்வேறு காரணிகளைக் குறிப்பிட்டு தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் அதனை வெற்றிகரமான நிறைவடையச் செய்வதற்காக நிதி அமைச்சு, பொலிஸ், அரச அச்சகம், பெற்றோலிய கூட்டுத்தாபனம், பொது நிர்வாக அமைச்சு உள்ளிட்டவற்றின் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

எவ்வாறிருப்பினும் துரதிஷ்டவசமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து மேற்குறிப்பிடப்பட்ட தரப்பினர் ஒத்துழைக்காமையினால் தேர்தல் நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இந்த நிலைமை ஜனநாயக நடைமுறைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், எதிர்கால தேர்தல்களில் மோசமான முன்னுதாரணமாகவும் அமையும். எனவே அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றத்தவறிய அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைள் தொடர்பிலும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.