;
Athirady Tamil News

ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்க இந்தியாவுடம் ஒத்துழைப்பு கேட்ட உக்ரைன் !!

0

உக்ரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தை ஆதரிக்கும்படி இந்தியாவை உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.

உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலையை கடைப்பிடித்து வருகிறது. இதன் காரணமாக போர் தொடர்பாக ஐ.நா.வில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை இந்தியா பெரும்பாலும் புறக்கணித்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் போர் ஓராண்டை நிறைவு செய்வதையொட்டி உக்ரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தின் மீது இன்னும் சில நாட்களில் ஓட்டெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கும்படி இந்தியாவை உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் தலைவர் ஆண்ட்ரி யெர்மக், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இது குறித்து ஆண்ட்ரி யெர்மக் கூறியதாவது; இந்தியாவுடனான ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்களின் தீர்மானத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ஏனெனில் அதில் எல்லைகள் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றிய சரியான வார்த்தைகள் உள்ளன.

எங்கள் இலக்குகள் வெளிப்படையானவை மற்றும் தெளிவானவை, நாங்கள் ரஸ்யாவின் ஒரு சென்டிமீட்டர் நிலத்தை கூட உரிமை கோரவில்லை.

ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் எங்களுடைய பிரதேசத்தை திரும்பப் பெற நாங்கள் விரும்புகிறோம். இந்தத் தீர்மானம் எங்களுக்கு அடிப்படையானது, ஏனெனில் இது சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்திற்கு உலகில் மரியாதையை மீட்டெடுக்கிறது.

ஒரு நாடு தனது பிரதேசத்தை கைப்பற்ற முயற்சிப்பதைத் தடுக்க பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.

இந்த கொள்கைகளை இந்தியாவும் உலகின் பெரும்பான்மையான நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம், என ஆண்ட்ரி யெர்மக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.