;
Athirady Tamil News

சபரிமலையில் இன்று பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்றனர்!!

0

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று தொடங்கியது. இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.45 மணிக்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜிவரரூ, மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் கொடிக்கு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் இத்திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். நாளை முதல் கோவிலில் உற்சவ பலியும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான ஏப்ரல் 4-ந் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறுகிறது. மறுநாள் பம்பையில் ஆறாட்டு விழா நடக்கிறது.

ஆறாட்டு முடிந்த பின்னர் அன்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தே கோவிலுக்கு வர வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.