;
Athirady Tamil News

என் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு அமெரிக்காவுக்கே இழுக்கு – ட்ரம்ப் ஆவேசம்!!

0

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ட்ரம்ப், தன் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு அமெரிக்காவுக்கே இழுக்கு என்று தெரிவித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப் பட நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு ட்ரம்ப் 1,30,000 டாலர்கள் வழங்கியதாக புகார் எழுந்தது. இந்த தொகை ட்ரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்டரீதியிலான செலவு என்று பதிவு செய்யப்பட்டது என்பது தான் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு. அமெரிக்காவில் பொய்யான வணிக செலவை காட்டுவது சட்டவிரோதம் ஆகும். இதுதொடர்பான வழக்கு மன்ஹாட்டன் நடுவர் மன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், தற்போது ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் ஆஜராக வந்த ட்ரம்ப், லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அமெரிக்காவுக்கே இழுக்கு.. ஜாமீனுக்குப் பின்னர் பேசிய ட்ரம்ப், “இது போன்றதொரு சம்பவம் அமெரிக்காவில் நடக்கும் என்று நான் நினைத்துகூடப் பார்த்ததில்லை. நான் செய்த, செய்யும் ஒரே குற்றம் இந்த தேசத்தை அழிக்க நினைப்பவர்களை எதிர்த்து அச்சமின்றி போராடுவது மட்டுமே. அமெரிக்க வரலாற்றில் ஓர் இருண்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில் உங்கள் முன்னர் பேச முடிந்த இந்த வேளையிலாவது நான் மகிழ்ச்சியுடன் இருக்கமுடிகிறது என்பதில் ஆறுதல்.

நம் தேசம் நரகத்தை நோக்கிச் செல்கிறது. இந்த உலகம் ஏற்கெனவே நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெற்றது. எல்லைகளைத் திறந்துவிட்டது என நிறைய முடிவுகளை நம்மை நகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது” என்று பேசினார். குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் அவருடைய பேச்சை ஆதரித்து ஆர்ப்பரித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.