;
Athirady Tamil News

“கடவுள் அருளியதில் கலவி அழகானது” – இளைஞர்கள் உடனான உரையாடலில் போப் பிரான்சிஸ் அறிவுரை!!

0

”தி போப் ஆன்ஸர்ஸ்“ (The Pope Answers) என்ற ஆவணப்படத்திற்காக கத்தோலிக்க மதகுருவான போப் பிரான்ஸிஸ் அளித்தப் பேட்டியில் “கடவுள் அருளியதில் கலவி அழகானது” என்று கூறியதோடு கலவியின் மாண்புகளையும் எடுத்துரைத்துள்ளார்.

அந்த ஆவணப்படத்திற்காகப் பேசியுள்ள போப் பிரான்சிஸ், “இறைவன் மனிதர்களுக்கு அளித்த அழகானவற்றியும் கலவியும் ஒன்று. உங்களை நீங்கள் கலவி வாயிலாக உணர்த்துவதென்பதும் ஒருவகை வளமைதான். ஆனால், அத்தகைய உண்மையான உணர்வுகளில் இருந்து உங்களை திசைமாற்றும் எந்த ஒரு முறையும் உங்களை கீழ்மைப்படுத்தக் கூடியதே” என்றார். போப் அவ்வாறாகக் கூறியது சுய இன்பத்தில் ஈடுபடுதலை சுட்டிக்காட்டியே என்று வாடிகன் செய்தித்தாளில் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், போப் பிரான்சிஸிடம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டபோது, “LGBT சமூகத்தினர் கத்தோலிக்க தேவாலயங்களால் வரவேற்கப்பட வேண்டியவர்களே. அனைவருமே கடவுளின் பிள்ளைகள்தான். கடவுள் யாரையும் வெறுப்பதில்லை. கடவுள் நமது தந்தை. அதனால் தேவாலயத்தில் யாரையும் வெளியேற்றும் அதிகாரம் எனக்கில்லை” என்றார்.

போப் பிரான்சிஸின் இந்தக் கருத்துகள் “லா அஸர்வேட்டர்ஸ் ரொமானோ” என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இது வாடிகனின் அதிகாரபூர்வ இதழாகும்.

”தி போப் ஆன்ஸர்ஸ்“ (The Pope Answers) ஆவணப்படத்திற்காக 20 வயதுகளில் உள்ள 10 பேருடன் போப் உரையாடல் நடத்தினார். அப்போது அவர் தன்பாலின உறவாளர்கள் உரிமைகள், கருக்கலைப்பு, ஆபாசப்பட உலகம், பாலியல் உறவுகள், கத்தோலிக்க தேவாலயங்களில் நடைபெறுவதாக வரும் பாலியல் தொல்லை புகார்கள் எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றியும் பேசியுள்ளார். டிஸ்னி+ தயாரிப்பு நிறுவனம் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.