;
Athirady Tamil News

உள்நாட்டு சண்டை- சூடானில் 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிப்பு !!

0

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் நாட்டின் அதிகாரத்தை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. துணை ராணுவ படைகளை ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்துல் பதா அல்-பர்ஹான் இடையே சுமூக முடிவு ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம், துணை ராணுவ படைகள் இடையே மோதல் வெடித்தது. வான்வெளி தாக்குதலும் நடத்தப்பட்டது.

சூடானில் ராணுவத்தினர் இடையேயான மோதலில் பொது மக்கள் பலியானார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சூடானில் ராணுவ படைகள் இடையேயான தொடர் மோதலில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்து உள்ளது. 2,600 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் உள்நாட்டு சண்டையால் சூடானில் 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- சூடானில் உள்நாட்டு சண்டை தீவிரம் அடைந்து உள்ளது. அங்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிக்கிறார்கள். கேரளாவை சேர்ந்த 200 பேர் சிக்கி உள்ளனர். மீட்பு பணிகள் குறித்து தூதரக அதிகாரிகள் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது. மத்திய அரசும், சூடான் தூதரக அதிகாரிகளும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளுடன் மீட்பு பணிகள் பற்றி தூதரக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.