சமுர்த்தி பெறும் குடும்பங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
சமுர்த்தி பயனைப் பெறும் குடும்பங்களில் சுமார் 33 சதவீதமான குடும்பங்கள் சமுர்த்தி பயனை பெறுவதற்குத் தகுதியுடைய குடும்பங்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
இதே அளவான குடும்பங்கள் சமுர்த்தியைப் பெற வேண்டியுள்ள போதிலும் அவற்றுக்கு சமுர்த்தி பயன் கிடைப்பதில்லை என்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
2015 ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நாடு முழுவதையும் உள்ளடக்கும் விதத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுடுப்பின் ஊடாக இது தெரியவந்திருப்பதாகவும், 449,979 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், இந்த சமுர்த்தி பயனாளிகளைத் தேர்வுசெய்யும்போது முறைகேடு இடம்பெற்றிருப்பது தெரியவந்திருப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமுர்த்தி திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் தெரியவந்தன.