ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் 6 நாட்களாக நடந்த வருமானவரி சோதனை நிறைவு- ஆவணங்கள் பற்றி விரைவில் அறிக்கை!!
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவரும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமானவரி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரி துறை அதிகாரிகள் கடந்த 24 -ந்தேதி முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்திவந்தனர். சென்னையில் 22 இடங்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வந்தது. இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 6 நாட்களாக தொடர்ச்சியாக வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை இந்த சோதனை அனைத்தும் நிறைவு பெற்றது. நீலாங்கரை பகுதியில் இன்று காலையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 6 நாட்களாக நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றிய விரிவான அறிக்கையை விரைவில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.