;
Athirady Tamil News

கேட்பாரற்று நின்ற சொகுசு காரில் இருந்த 158 கிலோ கஞ்சா- தப்பிச்சென்ற கடத்தல்காரர்களுக்கு வலைவீச்சு!!

0

ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் பகுதியில் ஜே.ஜே.நகரில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் கேட்பாரற்று மர்ம கார் ஒன்று சில நாட்களாக நின்றிருந்தது. இதுகுறித்து மத்திய புலனாய் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை கடந்த 2 நாட்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று மாலை வரையிலும் அந்த காரை எடுக்க யாரும் வரவில்லை. இந்நிலையில் போலீசார் அந்த காரின் கண்ணாடியை உடைத்து அந்த காரை இயக்கி மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அந்த காரின் உள்பகுதி மற்றும் பின்பகுதியை உடைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் 79 பார்சல்களில் தலா 2 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பார்சல்களில் இருந்த மொத்தம் 158 கிலோ கஞ்சாவையும், அந்த காரையும் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த கார் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பதிவு எண் கொண்டதாகும். ரூ.1 கோடி மதிப்புடைய கார் என்றும் கூறப்படுகிறது.

அந்த காரின் பதிவு எண்ணை வைத்து அது யாருடையது? காரில் கஞ்சா கடத்தி வந்த கடத்தல்காரர்கள் யார்-யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல்காரர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் நீண்ட நேரம் நின்றிருந்த சொகுசு காரில் கஞ்சா பார்சல்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், காரில் இருந்த கஞ்சா பார்சல்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.