விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி ; ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 2026 யால பருவத்திற்கான உரக் கையிருப்பினை தடையின்றி பேணுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று (24) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பதற்றங்களால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன் 2026 யால பருவத்தில் சுமார் 550,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குத் தேவையான 125,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நிறுவனங்களிடம் சுமார் 68,000 மெட்ரிக் தொன் யூரியா கையிருப்பில் உள்ளது. மேலதிகமாக 77,000 மெட்ரிக் தொன் உரத்தைப் பெற்றுக்கொள்ளக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
உர இறக்குமதி நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவைப் பணத்தை விரைவாகச் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
தற்காலிக தீர்வுகளுக்கு அப்பால், எதிர்கால நெருக்கடிகளைச் சமாளிக்க அரசாங்கம், தனியார் துறை மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து நீண்டகாலத் திட்டமொன்றை வகுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
உணவுப் பாதுகாப்பிற்கு உர விநியோகம் மிக முக்கியமானது என்பதால், குறுகிய காலப் பயிர்களான நெல் மற்றும் மரக்கறி செய்கைக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.