நியூயார்க்கில் ஏர் கனடா விமான விபத்து: விமானிகள் 2 பேர் உயிரிழப்பு: வெளியான முக்கிய விவரங்கள்
நியூயார்க் விமான நிலையத்தில் நிகழ்ந்த ஏர் கனடா விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
ஏர் கனடா விமான விபத்து
ஞாயிற்றுக்கிழமை இரவு நியூயார்க் நகரின் லாகார்டியா(LaGuardia) விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் ஒன்று ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஏர் கனடாவின் துணை நிறுவனமான ஜாஸ் ஏவியேஷனின் பிராந்திய விமானம் மாண்ட்ரியலில் இருந்து புறப்பட்டு லாகார்டியா-வில் தரையிறங்கிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது விமானத்தில் 72 பயணிகள் மற்றும் 4 பணியாளர் என மொத்தம் 76 பேர் இருந்துள்ளனர்.
விபத்தில் விமானிகள் இரண்டு பேரும் உயிரிழந்த நிலையில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட மற்ற 74 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 41 பேர் காயங்களுடன் குயின்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிட்டத்தட்ட 32 பேர் சிகிச்சை பெற்று மீண்டும் பத்திரமாக வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 9 பேரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்தை தொடர்ந்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விசாரணையை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
விபத்து எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்த முதல் கட்ட விசாரணையை ஏர் கனடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் ஓடுபாதையில் தீயணைப்பு வாகனம் எப்படி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கனடா பிரதமர் மார்க் கார்னி ஏர் கனடா விமான விபத்துக்கு வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய X தளத்தில் இந்த விபத்து மிகுந்த வருத்தம் தருவதாக தெரிவித்துள்ளார்.