;
Athirady Tamil News

மட்டக்களப்பில் மனைவி மீது தீ வைத்த கணவன்; பெண் உயிரிழப்பு

0

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பெற்று, வீடு திரும்பி, இரண்டு மாதங்களின் பின்னர், இன்று (24) உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.

வீடு திரும்பிய பெண் உயிரிழப்பு
கடந்த ஜனவரி 17ஆம் திகதி பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் தீ வைத்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

படுகாயமடைந்த பெண் 10 நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவிட்டு, பின்னர், வீடு திரும்பிய நிலையில் , இன்று காலை வீட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.