;
Athirady Tamil News

ஜூலை 12 முதல் 19-ந் தேதிக்குள் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்- இஸ்ரோ தலைவர் தகவல்!!

0

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளது. இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன் 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை உறுதி செய்தது. இதையடுத்து நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன் 2 விண்கலம் ஏவும் திட்டத்தை தொடங்கியது. நவீன கருவிகளுடன் உருவான சந்திராயன் 2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. செப்டம்பர் மாதம் இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விண்கலம் நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்காமல் நிலவில் மோதி செயல்இழந்தது.

அதே நேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்தநிலையில் சந்திராயன் 3 விண்கலம் ஏவும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர். இதன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். கேரளாவில் ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்க வந்த அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது:- சந்திராயன் 3 விண்கலத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. இதுபோல விண்கலத்தை ஏவும் மார்க்-3 ராக்கெட்டும் தயார் நிலையில் உள்ளது. இதற்காக பெங்களூரு யூ.ஆர்.ராவ் செயற்கை கோள் மையத்தில் இருந்து சந்திராயன் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.

அங்கு விண்கலத்தின் கம்ப்யூட்டர்கள், ஹார்ட்டிஸ்குகள் உள்ளிட்டவற்றை பரிசோதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் ஏவுதலின் போது எந்தவித இடையூறும் ஏற்பட கூடாது என்பதற்காக அனைத்து பரிசோதனைகளையும் விஞ்ஞானிகள் துல்லியமாக மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோல சந்திராயன் 3 விண்கலத்தை ஏந்தி செல்லு ம் மார்க் 3 ராக்கெட்டின் பரிசோதனையும் தொடங்கி நடந்து வருகிறது. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிந்து விடும். இதையடுத்து அடுத்த மாதம் ஜூலை 12 முதல் 19-ந் தேதிக்குள் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.