திருப்பதி கோவிலில் அன்ன பிரசாதம் திருடி விற்பனை- தேவஸ்தான ஊழியர் கைது!!
திருப்பதியில் ஸ்ரீ வராஹ சாமி, பேடி ஆஞ்சநேயர் சாமி, அலிபிரி நடைபாதையில் நரசிம்ம சாமி, ஆகாச கங்கா பாலம் அருகே ஆஞ்சநேயர் சாமி உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நெய்வேத்தியம் செய்வதற்காக அன்ன பிரசாதங்கள் தயார் செய்யப்படுகின்றன. இதனை வாகனங்கள் மூலம் அனுப்புகின்றனர். அன்ன பிரசாதம் தயார் செய்து கோவில்களுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்க வேண்டும். ஆனால் சில வாரங்களாக அன்னபிரசாதம் தயார் செய்யும் பணியில் உள்ள ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக அன்னப்பிரசாதங்களை கோவில்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தேவஸ்தான அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அன்ன பிரசாதங்களை ஊழியர்கள் திருடி வெளியே அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர். இதில் ஈடுபடுவது யார் என்பதை அறிய ரகசியமாக கண்காணித்தனர். அலிபிரியில் உள்ள நரசிம்ம சாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்ட அன்ன பிரசாத வாகனத்தை விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்காணித்தனர்.
அன்னபிரசாதம் கொண்டு சென்ற பாத்திரத்தில் மேலிருந்த துணி அகற்றப்பட்டு இருந்தது. மேலும் அன்ன பிரசாதம் திருடப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் அன்னபிரசாதம் கொண்டு சென்ற ஊழியரை கைது செய்தனர். எத்தனை நாட்களாக அன்னப்பிரசாதங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த முறைகேட்டில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.