;
Athirady Tamil News

குஜராத்தில் பலத்த காற்றுடன் மழை தொடங்கியது: மரங்கள் சரிந்தன- போக்குவரத்து நிறுத்தம்!!

0

அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் வடக்கு திசை நோக்கி கடந்த சில தினங்களாக நகர்ந்து வந்தது. இந்த நிலையில் அது தீவிர புயலாகவும், அதி தீவிர புயலாகவும் அடுத்தடுத்து மாறியது. வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் ‘பிபோர்ஜோய்’ அதிதீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இன்று காலை நிலை கொண்டிருந்தது. இது நாளை (வியாழக்கிழமை) மாலை குஜராத்தின் ஜாக்ஹா துறைமுகப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதி தீவிர புயல் கரையை கடக்கும் போது பலத்த மழையும், பலத்த காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மணிக்கு 125 முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் நேற்று முதல் மிக பலத்த மழையும், மிக பலத்த சூறாவளி காற்றும் வீசத் தொடங்கியுள்ளது.

இன்று (புதன்கிழமை) காலை முதல் பலத்த காற்றுடன் குஜராத் கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனால் குஜராத் கடலோர மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 95 ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் நாளை மாலை கரையை கடக்கும் போது கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேரிடர் மீட்பு குழுவின் 17 படை வீரர்கள் குஜராத் கடலோர பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். புயல் காரணமாக குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

புயல் அபாயம் உள்ள இதர மாவட்டங்களிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 6 மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று இன்று காலை வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எனவே புயலை எதிர்கொள்வது தொடர்பாக குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் கடற்படை வீரர்கள் கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். கடற்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 40 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.