குஜராத்தில் நேரடி ஆய்வு பிபர்ஜாய் புயலால் ஒரு பலி கூட இல்லை: அமித்ஷா அறிவிப்பு!!
பிபர்ஜாய் புயலால் ஒருவர் கூட பலியாகவில்லை என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். பிபர்ஜாய் புயலால் குஜராத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலுடன் இணைந்து ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த அவர், மாண்ட்வி மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். மேலும் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் பிஎஸ்எப் படை வீரர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், \”பிபர்ஜாய் புயலால் குஜராத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இதுமிகப்பெரிய சாதனை. பிபர்ஜாய் புயலில் 47 பேர் காயமடைந்துள்ளனர். 234 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. ஜூன் 20ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கப்படும். பயிர் மற்றும் படகுகள் சேதம் குறித்து மாநில அரசு விரைவில் கணக்கெடுப்பு நடத்தி நிவாரண நிதியை அறிவிக்கும்’’ என்றார்.
ராஜஸ்தானில் கனமழை: பிபர்ஜாய் புயல் தாக்கத்தால் ராஜஸ்தானில் கனமழை கொட்டி வருகிறது. பார்மர், ஜலோர், சிரோகி பகுதியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர அளவு படி மவுண்ட் அபு பகுதியில் அதிகபட்சமாக 210 மிமீ மழை கொட்டியுள்ளது.
மேகாலயாவில் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி: மேகாலயாவில் கனமழையால் மேற்குகாசி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 6 பேர் பலியானார்கள். இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.