;
Athirady Tamil News

பாராளுமன்ற தேர்தல்.. காங்கிரஸ் இல்லாமல் அது நடக்காது.. ராஷ்டிரிய லோக் தளம் கருத்து !!

0

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்றால் பாஜகவை தோற்கடிக்க முடியும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கணித்துள்ளனர். இதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளை அணிதிரட்டும் முயற்சிகள் அகில இந்திய அளவில் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 23ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பாஜகவை வீழ்த்தும் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த கூட்டணிக்கு தலைமை மற்றும் பிரதமர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இக்கூட்டம் குறித்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் ராமாஷிஸ் ராய் கூறியதாவது:- ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ராஷ்டிரிய லோக் தளம் ஆதரவு அளிக்கும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை எங்கள் கட்சி அங்ககீரிக்கும். அதேசமயம், காங்கிரஸ் கட்சி இல்லாமல் எந்த ஒரு கூட்டணியும் பாஜகவுக்கு எதிராக திறம்பட செயல்பட முடியாது என்பது எங்கள் கருத்து. உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சமாஜ்வாடி கட்சி மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் இணைந்து பணியாற்றியிருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும் என தொண்டர்கள் நினைக்கின்றனர். எனினும், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருப்பதால், சமாஜ்வாடி, காங்கிரஸ் மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து மாற்றத்தை கொண்டு வர ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் விருப்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.