;
Athirady Tamil News

டைட்டானிக்: டைட்டான் நீர்மூழ்கியில் சென்ற 5 பேரும் இறந்துவிட்டனர் – என்ன நடந்தது?

0

111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது.

டைட்டானில் ஓர் அழிவுகரமான வெடிப்பு நடந்திருப்பதாக அமெரிக்க கடலோரப்படை கூறுகிறது

இது அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு நாடுகளின் குழுக்கள் கடந்த ஐந்து நாள்களாக பெரிய அளவிலான தேடல், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன.

வியாழக்கிழமை மாலை அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டனின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது. இது நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருப்பதைக் காட்டுவதாகக் கூறியது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கடலோரப்படை, அவர்களின் உடல்கள் எப்போதாவது மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று கூறியது.

ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (ROVs) தளத்தில் இருக்கும் என்றாலும், அடுத்த 24 மணிநேரத்தில் தேடுதல் பணி படிப்படியாக நிறுத்தப்படுகிறது.

அமெரிக்கக் கடலோரப்படையின் செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக, டைட்டானை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

“எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்.” என்று நீர்மூழ்கியை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“இந்த மனிதர்கள் உண்மையான ஆய்வாளர்கள், அவர்கள் தனித்துவமான சாகச உணர்வையும், உலகின் கடல்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஆழ்ந்த ஆர்வத்தையும் கொண்டவர்கள்.. இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயங்கள் இந்த ஐந்து ஆன்மாக்களுடனும் அவர்களது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் உள்ளன. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மீட்புப் பணியில் மிகவும் கடினமாக உழைத்த சர்வதேச சமூகத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்த எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் முழு OceanGate குடும்பமும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்மூழ்கியில் பயணித்தவர்கள் யார்?

காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர்.

ஹாமிஷ் ஹார்டிங் – 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார்.
ஷாஸாதா தாவூத் – 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.
சுலேமான் தாவூத் – ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்
பவுல் ஹென்றி நர்கோலெட் – 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் ‘டைவர்’ பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.
ஸ்டாக்டன் ரஷ் – 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

முன்னதாக டைட்டானிக் அருகே தேடுதல் பணி நடைபெறும் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் ஆர்.ஓ.வி வாகனம் சில குப்பைகளைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்தது.

நீர்மூழ்கியின் தரையிறங்கும் சட்டகம், பின் பக்க உறை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

இடிபாடுகளில் கிடைத்தவற்றில் “ஒரு தரையிறங்கும் சட்டகம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு பின்புற உறை” ஆகியவை அடங்கும் என்று பயணிகளின் நண்பரான டேவிட் மியர்ன்ஸிடமிருந்து தகவல் வந்தது.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்கள், கடலின் மேற்புரத்தில் அதனோடு தொடர்பில் இருந்த கப்பலான போலார் பிரின்ஸ் உடன் இருந்த தொடர்பை, கடந்த ஞாயிறு அன்று இழந்தனர். இந்தத் தொடர்பு முறிவு, டைட்டன் கடலுக்குள் சென்ற ஒரு மணிநேரம் 45 நிமிடங்களில் நிகழ்ந்தது.

டைட்டானிக் கப்பலின் இடிபாடுகள் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டில் உள்ள செயின்ட் ஜான்ஸின் தெற்கே 700கிமீ தொலைவில் உள்ளது. டைட்டானி கப்பலின் சிதைவுகளுக்கு அருகே உள்ள கடல் பரப்பில் இந்தக் குப்பைகளை ஹொரைசான் ஆர்டிக்கின் ஆர்.ஓ.வி வாகனம் கண்டுபிடித்துள்ளதாக கடலோர காவல்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனமான ஐஃபிரேமர் (Ifremer) மூலம் இயக்கப்படும் விக்டர் 6000 என்ற நவீன நீர்மூழ்கி தேடுதல் பகுதிக்கு வந்தது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி மீட்புப் பணி நடக்கும் இடத்தில் இருந்து கூடுதலாக சத்தம் கேட்பதாக அமெரிக்க கடலோரப்படை தெரிவித்துள்ளது.

இந்த ஒலி காணாமல் போன நீர்மூழ்கியில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும், அது வேறு ஒலியாக இருக்கலாம் என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் காலியான பிறகு உயிர்வாழ்வது ஒரு நபரின் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது என்றும் சிலர் மற்றவர்களை விட நீண்ட காலம் வாழலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள செயின்ட் ஜான்ஸில் உள்ள மெமோரியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணரான டாக்டர் கென் லெடெஸுடன் பிபிசி நிருபர் பேசியுள்ளார்.

டாக்டர் லெடெஸ், காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கியில் இருந்தவர்களுக்கான சில காரணிகளை விளக்கினார்.

“இது விளக்கை அணைப்பது போல் இல்லை, அது மலையில் ஏறுவது போன்றது,” என்று அவர் கூறினார்.

“அவர்கள் ஆக்ஸிஜன் நுகர்வைக் குறைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். ஓய்வெடுப்பார்கள்.அவர்கள் முடிந்தவரை நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க முயற்சிப்பார்கள்.”

அதிகப்படியான செயல்பாடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், அதிக கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும் என்று அவர் விளக்கினார்.

“தாழ்வுநிலையில் இருப்பது அவர்களுக்கு சாதகமாக இருக்கலாம்”. என்கிறார் அவர்.

“அதிகமாகக் குளிர்ச்சியடைந்து சுயநினைவை இழந்தால், அதன் மூலம் அவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளது. குளிர்ச்சியாக இருக்கும்போது இதயத் துடிப்பு மிகவும் மெதுவாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

காணாமல் போன நீர்மூழ்கியைக் கண்டுபிடிக்க மீட்புப் பணியாளர்கள் சுமார் 2.5 மைல் (4 கிமீ) ஆழத்தில் தேடி வந்தனர்..

இது ஒரு கடினமான சூழல்; பூமியில் உள்ளதைக் காட்டிலும் விண்வெளியைப் போன்றிருக்கிறது என்று கூறலாம்.

மூழ்கிய டைட்டானிக் கப்பல் “நள்ளிரவு மண்டலம்” என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் சிதைந்து கிடக்கிறது. உறைய வைக்கும் குளிர், கருமையான இருளுக்குப் பெயர் பெற்ற பகுதி இது.

இந்த டைட்டன் நீர்மூழ்கியில் இதற்கு முன்பு இரண்டு முறை சென்றவர்கள், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருளான பகுதியில் இறங்கியதை விவரித்துள்ளனர். இறுதியாக கடலின் அடிப்பகுதியில் திடீரென மோதியிருக்கிறது.

நீர்மூழ்கிக் கப்பலின் இருக்கும் விளக்குகள் ஒரு குறிப்பிட்ட அளழுக்கு வெளிச்சத்தை வழங்குகின்றன. ஆனால் சில மீட்டருக்கு அப்பால் எதுவும் தெரியாது.

டைட்டான் நீர்மூழ்கி மிகவும் குறுகியது, வெறும் 670 செ.மீ x 280 செ.மீ x 250 செ.மீ (22 அடி x 9.2 அடி x 8.3 அடி) அளவு மட்டுமே கொண்டது. ஒரு பைலட், நான்கு பயணிகள் ஐந்து பேர் கொண்ட குழுவை ஏற்றிச் செல்ல முடியும்.

இது போட்டியாளர்களை விட பெரியதாக இருந்தாலும், பயணிகள் தரையில்தான் உட்கார வேண்டும். சுற்றி வர குறைந்த மிகக் குறைந்த இடமே இருக்கும்.

கப்பலின் முன்புறத்தில் ஒரு பெரிய குவிமாடம் போன்ற பார்வை வெளி இருக்கிறது. இதன் மூலம் வெளியே இருப்பதைப் பார்க்க முடியும்.

“பயணிகள் செல்லும் மற்ற எந்த நீர்மூழ்கிக் கப்பல்களைவிடவும் இந்த காட்சிப் பகுதி பெரியது” என்று நிறுவனம் கூறுகிறது.

அத்தகைய ஆழத்தில் மிகவும் குளிராக மாறும் என்பதால் நீர்மூழ்கியின் சுவர்களும் சூடாகின்றன. சுவரில் பொருத்தப்பட்ட விளக்குகள் மட்டுமே வெளிச்சத்துக்கான ஆதாரம்.

மற்ற நீர்மூழ்கிகளில் இல்லாத வகையில் முன்புறத்தில் பயணிகளுக்கான தனிப்பட்ட கழிப்பறை இதில் உண்டு. இதைப் பயன்படுத்தும்போது ஒரு சிறிய திரையால் மூடப்படும். கூடவே இசையும் ஒலிக்கும்.

ஆனாலும் உணவைக் குறைத்து கழிப்பறையைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் எந்று இந்தச் சுற்றுலா நிறுவனம் வலியுறுத்துகிறது.

காணாமல் போன டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி 5 பேருடன் நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியுள்ளது.

பயணத்தை தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அது செயின்ட் ஜான்ஸ் நகரில் இருந்து கிழக்கே 1,450 கி.மீ., தெற்கே 643 கி.மீ. தொலைவில் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த வார இறுதியில் ஹார்டிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில். டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்கப் போவதாக பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும், நியூபவுண்ட்லாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிர்காலம் மிக மோசமாக இருப்பதால் 2023-ம் ஆண்டில் அவரது பயணமே மனிதர்கள் அங்கே செல்லும் ஒரே பயணமாக இருக்கக் கூடும் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் அவரே, “வானிலை சற்று மேம்பட்டிருக்கிறது. ஆழ்கடல் பயணத்தை நாளை மேற்கொள்ளவிருக்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி விபத்தால் உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் பெயராக மாறியுள்ள ஓஷன்கேட் நிறுவனத்தை 2009ஆம் ஆண்டு, ஸ்டாக்டன் ரஷ் (Stockton Rush) என்பவர் தொடங்கினார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

‘பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடா பகுதிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக’ ஓஷன்கேட் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்மூழ்கியில் பயணம் செய்த பாக். வம்சாவளி பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஸாதா தாவூத்(மேலே), பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹாமிஷ் ஹார்டிங்
பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய நிபுணர் பணிநீக்கம்

காணாமல் போன நீர்மூழ்கியில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய டேவிட் லாக்ரிட்ஜ் என்ற நிபுணரை 2018-ம் ஆண்டில் ஓஷன்கேட் நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. வாய்மொழியாக அவர் கூறிய விஷயங்களை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் முறைப்படி அறிக்கையாக தயார் செய்து ஆய்வுக்கு முன்வைத்துவிட்டார்.

இதற்குப் பரிசாக, அவரை பணிநீக்கம் செய்ததுடன், கம்பெனி ரகசியங்களை கசியவிட்டதாக வழக்கும் தொடர்ந்தது. அந்த வழக்கில் இரு தரப்பும் பின்னர் சமரசம் செய்து கொண்டன.

ஓஷன்கேட் நிறுவனம் – நிபுணர் டேவிட் லாக்ரிட்ஜ் இடையிலான வழக்கில் நீதிமன்ற ஆவணங்களில் டேவிட் லாக்ரிட்ஜ் கண்டுபிடித்த பாதுகாப்புக் குறைபாடுகளாக சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது, தற்போது காணாமல் போயுள்ள டைட்டன் நீர்மூழ்கியின் முன்பக்க காட்சிப் பகுதி 4,265 அடி ஆழம் வரையே செல்ல சான்றளிக்கப்பட்டது.

ஆனால், 12,500 அடி ஆழத்தில் கிடக்கும் டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்க இந்த நீர்மூழ்கியில் தான் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

அது தற்போது காணாமல் போயிருப்பது குறித்து டேவிட்டின் கருத்தை அறிய பிபிசி முயன்றது. ஆனால், அவர் பதிலளிக்க விரும்பவில்லை. அவர் பாதுகாப்புக் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதே நீர்மூழ்கிதான், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ்ஷூடன் காணாமல் போயுள்ளது.

ஓஷன்கேட் நிறுவனம் ஆழ்கடலில் சுற்றுலாவுக்கென மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை சொந்தமாக வைத்துள்ளது. அவற்றில் ‘டைட்டன்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் மட்டுமே, கடலில் 13 ஆயிரம் அடி ஆழம் வரை செல்லக்கூடியது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் மிகவும் அதிநவீன முறையில், பாதுகாப்பானதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஓஷன்கேட் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
‘டைட்டன்’ நீர்மூழ்கியின் முதலிரு பயணங்கள் வெற்றி

2021, 2022 ஆகிய ஆண்டுகளில் ‘டைட்டானிக் கப்பல்’ மூழ்கியுள்ள பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள ‘டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏற்கனவே இரண்டுமுறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த பயணங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தற்போது 2023ஆம் ஆண்டு ‘டைட்டானிக் கப்பலை’ பார்வையிடுவதற்கான அடுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.” என ஓஷன்கேட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
‘டைட்டன்’ நீர்மூழ்கியின் செயல்திறன் என்ன?

10,432 கிலோகிராம் எடையும், 22 அடி நீளமும் கொண்ட டைட்டன் நீர்மூழ்கியால் 13,100 அடியாழம் வரை செல்ல முடியும், அதில் 5 பேருக்கு 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று ஓஷன்கேட் இணையதளம் கூறுகிறது.

ஆழ்கடலில் டைட்டானிக் மூழ்கியுள்ள இடத்திற்குச் சென்று திரும்பி வர 8 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஆழ்கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் இந்த சுற்றுலா 8 நாட்கள் கொண்டது. அதற்கு கட்டணமாக ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

ஆழ்கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கிடக்கும் இடத்திற்கு போலார் பிரின்ஸ் என்ற கப்பலில் இந்த நீர்மூழ்கிகள் கொண்டுவரப்படும்.
ஓஷன்கேட் நிறுவனம் சுவாரஸ்ய விளம்பரம்

“உங்களது வழக்கமான அன்றாட வாழ்க்கையில் இருந்து விடுபட்டு வெளியே வந்து உண்மையிலேயே அசாதாரணமான ஒன்றை கண்டடையும் வாய்ப்பு” என்று அந்நிறுவனம் கார்பன்-பைபர் நீர்மூழ்கியில் மேற்கொள்ளும் இந்த 8 நாள் சுற்றுலாவை விளம்பரப்படுத்துகிறது.

இந்த பயணத்திற்குப் பிறகு, அடுத்த ஆண்டில் இதுபோன்ற மேலும் 2 சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அதன் இணையதளம் கூறுகிறது.

1912-ம் ஆண்டு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மேற்கொண்ட கன்னிப் பயணத்தின் போதே, அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. பயணிகள், பணியாளர்கள் என அதில் இருந்த 2,200 பேரில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர்.

1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் திரைப்படத்தின் மூலம் இந்த விபத்து உலகம் முழுவதும் அனைவரும் அறிந்த, ஆர்வத்தை தூண்டும் ஒன்றாகிவிட்டது.

‘டைட்டானிக்’ கப்பல் நியூ ஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸ் நகருக்குத் தெற்கே சுமார் 700 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கிறது. ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் இரு பாகங்களாக 2,600 அடி இடைவெளியில் கிடக்கின்றன.

கடந்த மாதத்தில் ஆழ்கடல் வரைபடக் கலை மூலம் டைட்டானிக் சிதைவுகளின் முழுமையான டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்பட்டது. கப்பலின் பிரமாண்டம், அதன் ஒரு புரொபல்லரில் குறிப்பிடப்பட்டிருந்த வரிசை எண் போன்றவை அதன் மூலம் தெரியவந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.