;
Athirady Tamil News

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்- முதலமைச்சர் பதில் கடிதம்!!

0

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி ஆளுநர் உத்தரவை பிறப்பித்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கிடையே, பதவி நீக்கத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை கவர்னர் ரவி நிறுத்தி வைத்துள்ளார் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக எழுதிய கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் வெளியானது. அதில், “இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க, உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்” என கூறியுள்ளார்.

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் கடிதம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆளுநர் கடித விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு பதில் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் ஆளுநர் மாளிகைக்கு சென்றடைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.