;
Athirady Tamil News

ரூ.1,500-க்காக பெற்ற மகளையே வாலிபருக்கு விருந்தாக்கிய கொடூர தாய்!!

0

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடையை சேர்ந்தவர் அகில்தேவ் (வயது25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வினீஷா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அகில்தேவும், வினீஷாவும் மதுரைக்கு சென்று விட்டு ரெயிலில் திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு அதே ரெயிலில் 13 வயது மகளுடன் திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணும், அகில்தேவும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகில்தேவ் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘உன்னையும், உனது மகளையும் பார்க்க ஆவலாக உள்ளது.

எனவே உன் மகளை அழைத்துக்கொண்டு கொச்சிக்கு வா’ என கூறியுள்ளார். அதன்படி இளம்பெண்ணும் தனது மகளுடன் கொச்சிக்கு வந்தார். அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தயாராக இருந்த அகில்தேவ், தன்னை சந்திக்க ஓட்டலுக்கு வருமாறு கூறினார். இதையடுத்து இளம்பெண்ணும், அவருடைய மகளும் அங்கு சென்றனர். அப்போது 3 பேரும் ஓட்டல் அறையில் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் திடீரென்று அந்த பெண் தனது மகளை அகில்தேவுடன் தனியாக விட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

அப்போது சிறுமி என்றும் பாராமல் அகில் தேவ் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து கதறி அழுதபடியே அறையை விட்டு வெளியே வந்த சிறுமி தனக்கு நடந்தவற்றை தாயிடம் கூறினார். ஆனால் அவரோ, ‘உன்னை அகில் தேவிடம் தனிமையில் இருக்கவே அழைத்து வந்தேன். அதற்காக அவர் ரூ.1,500 -யை என்னிடம் கொடுத்து விட்டார்’ எனக்கூறினார். பெற்ற தாயே தன்னை நாசம் செய்ததை அறிந்து அந்த சிறுமி வேதனையடைந்தார். தொடர்ந்து அகில்தேவ் அந்த சிறுமியை தன்னுடைய காதலியான வினீஷாவின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் இருந்த வினீஷாவின் பெற்றோர் அகில்தேவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர்.

இதனால் ரகசியமாக காட்டாக்கடை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் அங்கு வந்த போலீசார் அகில்தேவிடம் விசாரணை நடத்தியபோது சிறுமிக்கு நடந்த கொடூரம் வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த அகில்தேவ், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் மற்றும் அகில்தேவின் காதலியான வினீஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ரூ.1,500-க்காக பெற்ற மகளையே வாலிபருக்கு தாய் விருந்தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.