வெள்ளியுடன் வேலை பறிபோகும் அபாயம் !!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடும் அரச சேவையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களாக பணியாற்றுபவர்களின் வேலைகள் ஜூலை 21 ஆம் திகதியுடன் பறிபோகும் அபாயம் காணப்படுவதாக எதிர்க்கட்சியில் சுயாதீன அணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களின் பணி பாதுகாப்பு குறித்து பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கையின் போது தனது கருத்தை முன்வைக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைப்பதால் வேட்பாளர்களாக போட்டியிடும் அரச ஊழியர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது என்றும் அரச ஊழியர்களுக்கே பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனவும் விசேட சுற்றுநிருபத்தை வெளியிட்டு இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
“இது தொடர்பான பிரச்சினை பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் சிலருக்கு தூர இடங்களில் உள்ள பாடசாலைகளுக்கு செல்ல நேரிட்டுள்ளது. குறித்த பாடசாலைகளில் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாமையினால் மாணவர்கள் பெரும் நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து புதிதாக அவர்களுக்காக சுற்றுநிருபத்தை வெளியிட்டு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இதுகுறித்து தெரிவித்த டலஸ் எம்.பி, “நிரந்தர அரச ஊழியர்கள் தொடர்பிலேலேயே நாங்கள் பேசுகிறோம். ஆனால் நிரந்தரமற்ற ஒப்பந்த அடிப்படையில் மற்றும் தற்காலிக பணியில் இருக்கும் உழியர்களுக்கு தமது சேவை பிரதேசத்திலோ அல்லது வேறு இடத்திற்கு சென்று பணியாற்றவோ அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் 6 மாதங்களுக்கு தொடர்ச்சியாக சேவைக்கு செல்லாவிட்டால் அவர்களின் நியமனம் இரத்தாகும்.
ஜூலை 21 ஆம் திகதியுடன் 6 மாதங்கள் பூர்த்தியாகின்றது. இதனால் இது பாரதூரமான நிலைமையே. அனைத்து கட்சிகளிலும் நூற்றுக்கணக்ககில் இவ்வாறான ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.