;
Athirady Tamil News

திருப்பதியில் தொடர் மழை- குளிரால் பக்தர்கள் அவதி!!

0

திருப்பதி, திருமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேகம் மந்தமாக காணப்படுகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்று லேசான பனிக்காற்று வீசுவதால் திருப்பதி மலையில் கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. திருப்பதி மலைப்பாதையில் திருமலைக்குச் செல்லும் வாகனங்கள் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை விளக்கு போட்டபடி செல்கின்றன. திருப்பதியில் இருந்து மலைப்பாதை வழியில் திருமலைக்கு மட்டுமே அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். அவர்கள் மழை குளிரால் அவதியடைந்துள்ளனர். வைகுண்டம் கியூ காம்ப்ளெக்சில் இரவு நேரத்தில் சாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களும், கோவில் நடை திறந்த பின்னர் அதிகாலை நேரத்தில் குளித்து விட்டு சாமி தரிசனத்திற்கு செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளிரை தாங்கியபடி தரிசனத்திற்குச் சென்று திரும்புகின்றனர்.

சிறுவயது குழந்தைகள், நடுத்தர வயது முதியோர் என வயது வித்தியாசமின்றி அனைவரும் குளிரை தாங்கும் கம்பளி ஆடைகளினால் தயார் செய்யப்பட்ட ஸ்வெட்டர்கள், தலைகுல்லா மற்றும் பெட்ஷீட்களை அணிந்தபடி திருப்பதி மலையில் உலா வருவதை காண முடிகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏழுமலையான் கோவிலில் நேற்று 73,796 பேர் சாமி தரிசனம் செய்தனர். 28,840 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.5 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 15 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.