;
Athirady Tamil News

எஸ்.டி. பட்டியலில் தனுஹர், தனுவர் சமூகங்கள்.. மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!!

0

சத்தீஸ்கரில் உள்ள தனுஹர், தனுவர், கிசான், சான்ரா, சவோன்ரா மற்றும் பிஞ்சியா சமூகங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. பாராளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். மாநிலங்களவையில் அமளிக்கு மத்தியில் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) சட்டம் (ஐந்தாவது திருத்தம்) மசோதா-2022 விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்திற்கு பின் குரல் வாக்கெடுப்பின்மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி எம்பி.க்கள் ஏற்கனவே வெளிநடப்பு செய்ததால் அவர்கள் இல்லாமலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக விவாதத்திற்கு பதிலளித்த மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா, சத்தீஸ்கரில் உள்ள 72,000 பேர் இந்த சட்டத்தின்மூலம் பயனடைவார்கள் என்றார்.

இது ஒரு சிறிய எண்ணிக்கைதான், ஆனால் இது பழங்குடியினர் நலனில் அரசின் அக்கறையை எடுத்துரைக்கிறது என்றும் அவர் கூறினார். தனுஹர், தனுவர், கிசான், சான்ரா, சவோன்ரா மற்றும் பிஞ்சியா சமூகங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்க இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது. புயின்யா, புய்யான் மற்றும் புயான் ஆகிய சமூகங்களை பரியா பூமியா சமூகத்தின் ஒத்த வார்த்தைகளாக முறைப்படுத்தவும் இந்த சட்டத்தில் உள்ளது. மேலும் இந்த மசோதாவில் பாண்டோ சமூக பெயரின் மூன்று தேவநாகரி பிரிவுகளும் அடங்கும். இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதும் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மசோதா 2022 டிசம்பரில் மக்களவையில் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.