;
Athirady Tamil News

சஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடல் !!

0

12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு விசேட விடயங்கள் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல்,அரசியலமைப்பைப் பாதுகாத்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துதல் போன்ற விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

அரசாங்கத்தின் ஜனநாயகத்தின் அப்பட்டமான மீறல் போலவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அரசின் திறமையின்மை,ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்தாதது மற்றும் சட்டத்துறையில் எழுந்துள்ள பல பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் திருமதி Julie J Chung,நெதர்லாந்தின் தூதுவர் திருமதி Bonnie Horbach,இந்தியா உயர்ஸ்தானிகர் திரு Gopal Baglay, நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton,ஆஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் Paul Wesley Stephens,பிரான்ஸ் தூதுவர்

Jean Francois Pactet,கனேடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh,ஐக்கிய இராச்சியத்தின் பதில் பிரதி உயர்ஸ்தானிகர் Lisa Whanstall,ரோமானிய தூதுவர் Victor Chiujdea,ஜப்பானிய பிரதி தூதுக்குழுவின் பிரதானி Katsuki Kotaro,இத்தாலிய பிரதி தூதுக்குழுவின் பிரதானி Dr. Francesco Perale,ஐரோப்பிய ஒன்றிய அரசியல் விவகாரப் பிரிவின் Anne Vaugier Chatterjee ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் முன்னிலையில் உரையாற்றியதுடன் நாடு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

வேண்டுமென்றே தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பாக தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மக்களின் பிரச்சினைகளில் அக்கறையின்மையால் அஸ்வெசும போன்ற வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டின் சுகாதாரத் துறை எவ்வாறு சீர்குலைந்துள்ளது மற்றும் தரமற்ற மருந்துகளால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் நினைவு கூர்ந்தார்.

ஊழலுக்கு எதிராக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன என்றாலும்,ஊழல் மோசடிகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை என்றும்,நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை மீட்பதற்குப் பொருத்தமான வழிகள் எதுவும் கட்டமைக்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

சட்டத் துறையில் பல சிக்கல்கள் உள்ளன என்றும்,சகல சட்டமூலங்களிலும் குறைபாடுகள் உள்ளதாகவும்,இதனால் சட்டத்துறைக் கட்டமைப்பின் தரம் குறைந்துள்ளதாகவும் இங்கிருந்த தூதுவர்களிடம் எடுத்துரைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.