;
Athirady Tamil News

1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத வகையில் பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பு- ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

0

பருவ நிலை மாற்றம் காரணமாக பூமியின் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறது. தற்போது ஐரோப்பா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீயும் பரவி வருகிறது. நிலக்கரி, எண்ணெய், எரிவாயு மற்றும் பிற மனித செயல்பாடுகளால் பூமி வெப்ப நிலை 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஐ.நா.வில் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பனிக்கட்டிகள், மரங்களின் வயது, பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்ப நிலை உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் அதிகபட்சமாக சீனாவின் 126 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி இருந்ததையும், கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதையும் ஆராயப்பட்டது.

இந்த வெப்ப நிலை தொடர்ந்து நீடிக்கும்போது பனிப்பாறைகள் மேலும் உருவாகி கடல்நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் மூழ்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். மேலும் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து உள்ளதாகவும், உலகின் மிகவும் குளிர் நிலவக்கூடிய அண்டார்டிகா பகுதியிலும் வெப்ப காற்றை உணர முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 1.20 லட்சம் ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக இந்த ஜூலை இருக்கும் என்று கால நிலை விஞ்ஞானி கார்ஸ்டன் ஹவுஸ்டீன் தெரிவித்தார்.

ஜெர்மனியின் லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஹவுஸ்டீன் நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது:- கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்த வெப்பத்தை விட இந்த ஜூலை மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது. முழுமையான உலகளாவிய சராசரி வெப்ப நிலையின் அடிப்படையில் எப்போதும் வெப்பமான மாதமாக இது இருக்கும். மனிதர்களால் அதிக அளவு பசுமை இல்லாவாயுக்களை தொடர்ந்து வெளியிடுவதே வெப்ப நிலை உயர்வுக்கு காரணம். எல் நினோவின் விளைவுகள் ஆண்டின் 2-ம் பாதியில் ஜூன் மற்றும் ஜூலையில் மட்டுமே முழுமையாக வெளி வருவதால் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை அதிக வெப்பம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.