;
Athirady Tamil News

சந்திரன், செவ்வாயில் விண்வெளி வீரர் உயிரிழந்தால் உடல் என்ன ஆகும்?

0

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது மிகவும் கடினமான செயல் மட்டுமல்ல, மிகவும் ஆபத்தான சவாலும் கூட என்பதில் சந்தேகமில்லை.

மனிதன் விண்வெளியை ஆய்வு செய்யத் தொடங்கி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அப்போதிருந்து இதுவரை விண்வெளியில், 20 பேர் இறந்துள்ளனர். 1986 மற்றும் 2003 இல் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய விண்கலத்தில் 14 பேரும், 1971 சோயுஸ் 11 பயணத்தின் போது 3 பேரும், 1967 இல் அப்பல்லோ 1 ஏவுதளத்தில் 3 பேரும் இதில் அடங்குவர்.

விண்வெளிப் பயணம் அவ்வளவு சிக்கலானதாக இருந்த போதிலும் இதுவரை மிகச்சிலர் மட்டும் தான் விண்வெளியில் உயிரை இழந்துள்ளனர் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இச்சூழ்நிலையில், நாசா 2025-ம் ஆணடு நிலவுக்கு ஒரு குழுவையும், அடுத்த பத்தாண்டுகளில் செவ்வாய் கோளுக்கு ஒரு குழுவையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

மேலும், வணிக ரீதியான விண்வெளிப் பயணங்களும் இன்றைய காலகட்டத்தில் பெருகி வருகின்றன.

அதனால் விண்வெளிப் பயணம் என்பது மிகவும் பொதுவானதாகிவிட்டது. ஆனால், இப்பயணத்தின் போது வழியில் யாராவது உயிரிழப்பதற்கான ஆபத்துகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன.

இது கடினமான ஆனால் மிகவும் அவசியமான ஒன்றைப் பற்றி என்னைச் சிந்திக்க வைக்கிறது: விண்வெளியில் யாராவது உயிரிழந்து விட்டால் என்ன ஆகும்?

விண்வெளி சுற்றுலா என்ற புதிய சந்தை இப்போதுதான் தொடங்கி, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கியுள்ளது.

விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் தொடர்பான ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நான், விண்வெளி வீரர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறியும் ஒரு விண்வெளி மருத்துவர் என்ற முறையில், நானும் எனது குழுவினரும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், அவர்களுடைய பயணங்களின் போது முடிந்தவரை ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

இன்றுவரை, விண்வெளியில் ஏற்படும் உயிரிழப்புகளை நாம் இப்படித் தான் எடுத்துக் கொண்டுள்ளோம். சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற பூமிக்கு அருகில் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டால், மரணமடைந்தவரை அவரது குழுவினர் ஒரு சிறிய கலம் மூலம் சில நிமிடங்களில் அல்லது சில மணிநேரங்களில் பூமிக்கு அனுப்ப முடியும்.

அதே மரணம் சந்திரனில் நடந்தால், உயிரிழந்தவரின் குழுவினர் ஒரு சில நாட்களில் அவருடைய உடலுடன் வீடு திரும்பலாம்.

நாசா ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்கொள்வதற்காக விரிவான நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

அப்படி விரைவாக உடல் எடுத்துவரப்படும் போது, உடலைப் பாதுகாப்பது நாசாவின் முதன்மையான அக்கறை அல்ல. அதற்கு பதிலாக, மீதமுள்ள ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவதை உறுதி செய்வதே நாசாவின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது.

செவ்வாய் கிரகத்திற்கு 300 மில்லியன் மைல் தூரம் பயணிக்கும் போது, ஒரு விண்வெளி வீரர் இறந்தால் அப்போது கையாள வேண்டிய நடைமுறைகள் வித்தியாசமாக இருக்கும்.

சிவப்பு நிறத்தில் தோன்றும் செவ்வாய் கோளின் மேற்பரப்பு குளிர்ந்த பாலைவனமாக இருக்கிறது.

அந்தச் சூழ்நிலையில் ஒருவர் உயிரிழந்தால், ஆராய்ச்சிக் குழுவினர் திரும்பவும் பூமிக்கு வரமுடியாது.

அதற்கு பதிலாக, ஆராய்ச்சிப் பணிகள் நிறைவடைந்த பின் அக் குழுவினருடன், உயிரிழந்தவரின் உடல் பூமிக்குத் திரும்ப கொண்டுவரப்படும். இது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கூட இருக்கலாம்.

இந்த காலகட்டத்தில், ஒரு தனி அறை அல்லது தனியாக வடிவமைக்கப்பட்ட பையில் உடலைப் பாதுகாக்க குழுவினர் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

கோட்பாட்டளவில் இதைக் கூறினால், விண்கலத்தின் உள்ளே நிலவும் நிலையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உடலைப் பாதுகாக்க உதவும் என்று கூறலாம்.

ஆனால் அது போன்ற நிலைகள் அனைத்தும் ஒரு விண்வெளி நிலையம் அல்லது விண்கலம் போன்ற அழுத்தமான சூழலில் யாராவது உயிரிழந்தால் மட்டுமே பொருந்தும்.

செவ்வாய் கோளுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா தயாராகிவருகிறது.

சரியான விண்வெளி உடையின் பாதுகாப்பு இன்றிச் சென்றால் அந்த ஆராய்ச்சியாளர் கிட்டத்தட்ட உடனடியாக இறந்துவிடுவார்.

உடலைச் சுற்றிலும் இருக்கும் காற்றழுத்தம் விண்வெளியில் இருக்காது என்பதாலும், விண்வெளியின் வெற்றிடத்தில் மனிதன் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதாலும் பாதுகாப்பான ஆடைகளை அணியாவிட்டால் உயிருடன் இருக்க முடியாது.

மேலும், இரத்தம் மற்றும் உடலில் உள்ள பிற திரவங்கள் கொதிக்கத் தொடங்கிவிடும். விண்வெளி வீரர் ஒரு பாதுகாப்பான உடை இல்லாமல் சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்திற்குச் சென்றால் என்ன அங்கு வளிமண்டலம் இல்லாததால் அல்லது மிகவும் மெல்லிய வளிமண்டலம் இருப்பதால் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது.

இதன் விளைவாக, மூச்சுத் திணறல் மற்றும் ரத்தகொதிப்பு ஏற்படும். அதைத் தொடர்ந்து மரணம் சம்பவிக்கும்.

ஆராய்ச்சிக்காகச் செல்லும் ஒரு விண்வெளி வீரர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கிய பின்னர் உயிரிழந்தார் என வைத்துக்கொள்வோம். அவரது உடலை அங்கே தகனம் செய்வது செய்வது சிறந்த வழி அல்ல. ஏனென்றால், அதற்கு வீரர்களிடம் இருக்கும் ஆற்றலைச் செலவிட வேண்டியிருக்கும். அது பிற வீரர்களின் தேவைகளுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். அதே நேரம் அந்த உடலை அடக்கம் செய்வதும் நல்ல யோசனை அல்ல. அடக்கம் செய்யப்பட்ட அந்த உடலில் இருந்து பாக்டீரியா மற்றும் பிற உயிரினங்கள் செவ்வாய் கோளின் மேற்பரப்பை மாசுபடுத்தலாம். அதற்கு பதிலாக, ஆராய்ச்சிக் குழுவினர் அந்த உடலை பூமிக்கு திரும்பும் வரை தனியாக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு உடல் பையில் பாதுகாப்பார்கள்.

செவ்வாய் கோளில் மனிதகுலம் குடியேற முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

விண்வெளியில் ஒரு மரணத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி இன்னும் பல தெரியாத செய்திகள் உள்ளன. உடலை என்ன செய்வது என்பது மட்டும் கேள்வி அல்ல. இறந்த நபரின் உடலைக் கையாள்வது போலவே, இழப்பைச் சமாளிக்க குழுவினருக்கும், பூமியில் துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கும் உதவுவது மிகவும் முக்கியம்.

சந்திரன், செவ்வாய், அல்லது நமது சூரியமண்டலத்துக்கு வெளியில் ஏதாவது ஒரு உலகத்தில் நாம் குடியேற வேண்டுமானால், அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு திட்டமிடுதல் மற்றும் புதிய நெறிமுறைகளை வகுப்பதே தற்போதைய காலகட்டத்தில் முக்கிய தேவையாக இருக்கும்.

(கட்டுரையாளர் இம்மானுவேல் உர்கியேட்டா, ஹூஸ்டனில் உள்ள டெக்சாஸ் மருத்துவ மையத்தில் அமைந்துள்ள பேய்லர் மருத்துவக் கல்லூரியில் விண்வெளி மருத்துவம் மற்றும் அவசர மருத்துவப் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.)

You might also like

Leave A Reply

Your email address will not be published.