;
Athirady Tamil News

ஸ்தாபகர் தினத்தில் விழாக்கோலம் கண்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று (2023.10.24) விழாக்கோலம் பூண்டிருந்தது.

மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டிருந்த இந்நிகழ்வில் நேற்றைய தினம் தென்கிழக்கு பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் (TASEU) ஏற்பாட்டில் அதன் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இன்று 24.10.2023 காலை ஸ்தாபகர் தின பிரதான வைபவம் பல்கலைக்கழக பிரதான கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

கலை கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் அவர்களது வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டார்.

விஷேட அதிதியாக பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா பங்குகொண்டதுடன் விஷேட பேச்சாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் புதல்வர் அமான் அஷ்ரப் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்வில் உபவேந்தர் விருது, 25 வருடங்களுக்கு மேலாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றியோருக்கான விருது மற்றும் இப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற முதல்தொகுதி மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் என்பனவும் வழங்கப்பட்டன.

நிகழ்வின்போது பீடாதிபதிகள், பதில் பதிவாளர், பதில் நிதியாளர், நூலகர், பேராசிரியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பொறியியலாளர், திணைக்களங்களின் தலைவர்கள் விரிவுரையாளர்கள், ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் கல்விசார உத்தியோகத்தர்கள், விசேடமாக அழைக்கப்பட்டோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பகல் இரண்டு மணி முதல் பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.

நாளை 2023.10.25 ஆம் திகதிவரை மக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் நூலகம் மற்றும் பீடங்கள் பல்வேறு காட்சி அரங்குகளை அங்குராப்பணம் செய்திருந்தது.

பல்கலைக்கழக நூலகத்தில் ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்களது நூல் தொகுதிகள் அடங்கிய பிரிவு ஒன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகமெங்கும் காணப்பட்டனர்.

நாளைய நிகழ்வில் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடம் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டு அங்கும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.