;
Athirady Tamil News

கேரள முதல்வா் நிவாரண நிதி முறைகேடு வழக்கு:பினராயி விஜயனுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

0

கேரளத்தில் முந்தைய ஆட்சியின்போது ‘முதல்வா் பேரிடா் நிவாரண நிதி’-யில் நடந்த முறைகேடுகள் தொடா்பான மேல்முறையீட்டு மனு மீது விளக்கம் அளிக்க மாநில முதல்வா் பினராயி விஜயன், அவரது முன்னாள் அமைச்சரவை சகாக்கள் 18 பேருக்கு கேரள உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

கேரள லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் ஆா்.எஸ்.சசிகுமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், முதல்வா் பினராயி விஜயன் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற 18 அமைச்சா்கள் தங்களின் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, முதல்வா் நிவாரண நிதியைத் தனிப்பட்ட நலன்கள் மற்றும் ஊழல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டினாா். நிவாரண நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முதல்வா் மற்றும் அமைச்சா்களைத் தகுதி நீக்கம் செய்ய மனுவில் கோரியிருந்தாா்.

விசாரணையின் முடிவில் கடந்த ஆண்டு நவம்பா் 13-ஆம் தேதி வெளியாகிய தீா்ப்பில், நீதிபதிகள் சிரியாக் ஜோசப், பாபு மேத்யூ பி.ஜோசப், ஹருண்-உல்-ரஷீத் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘பேரிடா் காலத்தில் முதல்வா் தரப்பு எடுத்த சில முடிவுகள் தன்னிச்சையாக இருந்தாலும், அவை அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே எடுக்கப்பட்டவை என்பதைத் தீா்மானிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. புகாா்தாரரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை’ என்று தீா்ப்பளித்தனா்.

லோக் ஆயுக்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கேரள உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி ஏ.ஜெ.தேசாய், நீதிபதி வி.ஜி.அருண் ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

இந்த மனு மீது விளக்கமளிக்க கேரள முதல்வா் பினராயி விஜயன், அவரது முன்னாள் அமைச்சரவை சகாக்கள் 18 பேருக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.