;
Athirady Tamil News

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு தொகுதி ஏலக்காய் மீட்பு!

0

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற இந்திய மதிப்பில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஏலக்காய் மண்டபம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்துள்ள குந்துகால் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், சமையல் மஞ்சள், கடல் அட்டைகள் உள்ளிட்ட பல பொருட்கள் சமீப காலமாக பிடிபட்டு வருகின்றது.

இதைத்தொடர்ந்து பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை பகுதியை மையப்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இந்திய கடலோர காவல்படை, உளவுத்துறை, நீரியல் காவல்துறை என பல்வேறு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனை
இந்நிலையில், நேற்று (29) நள்ளிரவு மன்னார் வளைகுடா கடல் வழியாக படகில் ஏலக்காய் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குந்துகால் மீன்பிடி துறைமுக பகுதியில் மண்டபம் நீரியல் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது குந்துகால் மீன்பிடி துறைமுகம் பகுதியில் நீரியல் காவல்துறையினரை கண்டதும் 3 நபர்கள் மூட்டை ஒன்றை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த நீரியல் காவல்துறையினர் அந்த மூட்டையை சோதனை செய்தபோது அதில் 43 கிலோ ஏலக்காய் மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.

தீவிர விசாரணை
இதையடுத்து ஏலக்காய் மூட்டையை கைப்பற்றிய நீரியல் காவல்துறையினர் ஏலக்காய் மூட்டையை இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கைபற்றபட்ட ஏலக்காய் மூட்டையை ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஏலக்காய் இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும் நீரியல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குந்துகால் கடற்கரை இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தும் முக்கிய கேந்திரமாக மாறியுள்ளது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.