;
Athirady Tamil News

புத்துச்சேரி சிறுமி கொலை: நெஞ்சைப் பதற வைக்கிறது – தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

0

சிறுமியை மிருகத்தனமாக படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுமி கொலை
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த ஆர்த்தி (9) என்ற சிறுமி கடந்த 2-ம் தேதி மாயமானார். இதுகுறித்து புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிறுமியை விரைந்து மீட்கக் கோரி குடும்பத்தினரும், உறவினர்களும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே கடந்த 4-ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து நேற்று சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி கழிவுநீர் கால்வாயில் இருந்து சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பின்னர் சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வீடியோ பதிவுடன் உடற்கூறாய்வு செய்யப்பட்டதில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் புதுச்சேரி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விஜய் ஆறுதல்
மேலும், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 19 வயதாகும் கருணாஸ் என்ற இளைஞரும் 60 வயதாகும் விவேகானந்தன் என்ற முதியவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ளது எக்ஸ் பதிவில் “புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.