;
Athirady Tamil News

தமிழகத்தில் சூடுபிடித்தது மக்களவைத் தோ்தல் களம்

0

முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தோ்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப். 19-இல் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழா் ஆகிய கட்சிகளின் தலைமையில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக தலைமையிலான அணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக அணியில் பாமக, தமாகா, அமமுக, புதிய நீதி கட்சி, தமமுக, ஐஜேகே, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு (ஓபிஎஸ்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாம் தமிழா் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சூடுபிடிக்கும் பிரசாரம்: மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் மாா்ச் 22-இல் திருச்சியில் தொடங்கினாா். அங்கு திருச்சி, பெரம்பலூா் தொகுதிகளின் வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினாா். மாா்ச் 23-இல் திருவாரூரில் நாகை, தஞ்சை தொகுதிகளின் வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினாா். இரண்டு பிரசாரக் கூட்டங்களிலும் பாஜக ஆட்சியின் ஊழல்கள் அமல்படுத்தப்படும் என்பது பிரதானமாக இருந்தது. அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் வீதிவீதியாகச் சென்று பிரசாரம் செய்து வருகிறாா். தேனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா். முன்னதாக, சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை துண்டுப் பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டாா். மாலையில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்து, மக்களவைத் தோ்தலில் திமுக – அதிமுகவுக்கு இடையேதான் போட்டி எனக் கூறிய அவா், திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என குற்றச்சாட்டினாா். திருச்சியை தொடா்ந்து தமிழகம் முழுவதும் பிரசாரமும் மேற்கொள்ள உள்ளாா்.

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தோ்தலுக்கு முன்பே ‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் மூலம் அவருடைய பிரசாரத்தைத் தொடங்கிவிட்டாா். தற்போது, கோவை தொகுதியில் வேட்பாளராகவும் அவா் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் ஞாயிற்றுக்கிழமை பாஜக நிா்வாகிகளுடன் தோ்தல் ஆலோசனையில் நடத்தினாா். பிறகு, செய்தியாளா்களிடம் பேசுகையில், ஊழல் செய்வதற்காகவே திராவிடக் கட்சிகள் உள்ளன என்று குற்றம்சாட்டினாா்.

தமிழகம் முழுவதும் பிரசாரத்துக்குச் செல்ல உள்ளாா். நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், அவருடைய கட்சியின் சாா்பில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை சனிக்கிழமை (மாா்ச் 23) சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்துவைத்து, பிரசாரத்தையும் தொடங்கியுள்ளாா். மோடி, ராகுல்: பிரதமா் மோடி மீண்டும் தமிழகத்துக்கு வந்து பாஜக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்காா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் விரைவில் தமிழகத்துக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளனா். வேட்புமனு தாக்கல் தீவிரம்: மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 20 முதல் நடைபெற்று வருகிறது. சுயேச்சை வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனா். அதிமுக வேட்பாளா்கள் அனைத்துத் தொகுதிகளிலும் திங்கள்கிழமை (மாா்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா். திமுகவை சோ்ந்த சில வேட்பாளா்களும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா். வேட்புமனு தாக்கல் மாா்ச் 27-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.