;
Athirady Tamil News

ஜனாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போரட்டம்

0

ஜனாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போரட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, போராட்டம் தொடர்பில் வடமாகாண பட்டதாரிகள் சங்க ஊடக பேச்சாளர் கி.டனிசன் தெரிவித்துள்ளார்

மேலும் தெரிவிக்கையில்,

வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு சரியான வகையில் இதுவரை எந்தவொரு தரப்பினரும் தீர்வை தரவில்லை.

வடக்கின் ஆளுநரிடமும் பல தடவைகள் கோரிக்கை முன்வைத்திருந்தும் அவரும் எம்மை கண்டு கொள்ளாதவராகவே இருந்துவருகின்றார்.

இந்நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் ஆகிய நாம் நாளைய தினம் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான மூன்று நாட்களும் எமது பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

குறிப்பாக எமது மூன்று நாள் போராட்டமானது, நாளையதினம் புதன்கிழமை பசுமை தானம் என்னும் தொனிப்பொருளில் மரக்கன்று விநியோகித்தலுடன் யாழ் வீரசிங்கம் மண்டபம் முன்றலில் ஆரம்பிக்கப்படுவதுடன், நாளை மறுதினம் வியாழக்கிழமை கலைத்தூது கலையரங்கில் இரத்த தான முகாமும் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜானாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு மாவட்ட செயலகம் முன்பாக பட்டதாரிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு எமது நிலையை எடுத்துக் கூறும் வகையில் கவன ஈர்ப்பு போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் குறித்த சங்கத்தின் தலைவர் சசிதரன் தெரிவிக்கையில் வேலையற்ற பட்டதாரிகள் என்ற வகைக்குள் கலைத்துறையில் பட்டங்களை பெற்றவர்களே முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைக்கு நாட்டின் கல்வி கட்டமைப்பே காரணமாக இருக்கின்றது. இதேவேளை நாட்டின் கல்வி திட்டத்தின் ஊடாக முறையான தகுதி திறனை நாம் கொண்டிருக்கின்றோம்.

எமக்கு வேலைவாய்ப்பு வழங்கபடவில்லை எனில் அதற்கு முழுப் பொறுப்பும் இந்த கல்வி திட்டத்தினை கொண்டிருக்ககூடிய அரசினதே ஆகும். வடமாகாணத்தில் இன்று பல்வேறுபட்ட திணைக்களங்களில் வேலைவாய்ப்பு வெற்றிடம் காணப்படுகின்றது.

இலங்கை அரச கட்டமைப்பின் பட்டபடிப்பு மூலமே நாம் கல்வித் தகுதியை பெற்றுள்ளோம். அதற்கு உரிய தொழில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே நாம் இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

இதேநேரம் ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு எமது நிலைப்பாடுகள் அடங்கிய கோரிக்கை கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளோம்.

மேலும் அரசாங்கம் உருவாகி சில மாதங்களே கடந்துள்ளது. இந்த அரசாவது எமக்கான தீர்வை தரும் என நாம் எதிர்பார்த்தோம். அதுவும் ஏமாற்றமாகவே இருக்கின்றது என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.