;
Athirady Tamil News

ஜப்பானில் பற்றியெரியும் காட்டுத்தீ!

0

ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், கடந்த 8 நாள்களாக பற்றியெரியும் காட்டுத்தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சுமார் 40,000 மக்கள் வசிக்கும் நகரமான ஒஃபுனாடோவில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2,100 ஹெக்டேருக்கும் மேற்பட்ட வன நிலப்பரப்புகளில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ள தீயணைப்பு மற்றும் பேரிடர் நிர்வாக அமைப்பு, பாதிப்படைந்த நிலப்பரப்பின் அளவு இன்னும் தெளிவாக தெரியவில்லை. 1992 இல் ஏற்பட்ட காட்டுத்தீக்கு 1,030 ஹெக்டர் பரப்பளவிலான நிலம் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத்தீ இது என்று தெரிவித்துள்ளது. மேலும் தீயினால் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி வடகிழக்கு கடற்கரையில் உள்ள ஒஃபுனாடோ நகரில் தீ விபத்து ஏற்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகும் தீ தொடர்ந்து பரவி வருகிறது. இதற்கு தற்போது வழக்கத்திற்கு மாறாக நிகழ்ந்து வரும் வறண்ட குளிர் மற்றும் பலத்த காற்றுதான் காரணம் என்று வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.

திங்கள்கிழமை சுமார் 2,100 ஹெக்டேர் நிலத்தில் பரவிய காட்டுத்தீ, 84 வீடுகளை சேதப்படுத்தியுள்ளது மற்றும் 1,200-க்கும் மேற்பட்டோர் பள்ளிகளின் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பிற தங்குமிடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,000 பேர் நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

கடந்த 27 ஆம் தேதி நகரத்தில் உள்ள ஒரு சாலையில் உடல் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஒருவரின் மரணத்திற்கு தீ விபத்து காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீயினால் 80-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த நாடு முழுவதுமிருந்து ஏறக்குறைய 2,000-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை கட்டுக்குள் கொண்டுவரப்படாத காட்டுத்தீ, இன்று மேலும் இரண்டு இடங்களில் பரவியுள்ளதாகவும், ஆபினாட்டோ நகரை நெருங்கியுள்ள நிலையில் 4,400-க்கும் மேற்பட்டோரை வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

1980-களுக்குப் பிறகு ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ இதுவாகும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டுவரவும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதத்தை குறைக்கும் நடவடிக்கையில் தேவையான அளவு தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,”தீ ஓரளவுக்கு பரவுவது தவிர்க்க முடியாதது என்றாலும், மக்களின் வீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,” என்று பிரதமர் ஷிகெரு இஷிபா கூறியுள்ளார்.

இதனிடையே, புதன்கிழமை காலை பனி பொழியத் தொடங்கி நண்பகல் மழையாக மாறும் என்றும் இதனால் தீ பரவல் கட்டுப்படுத்தப்படும் என வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் முழுவதும் ஒஃபுனாடோவில் 2.5 மிமீ மழை பெய்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் இதே மாதத்தில் சராசரியாக 41 மிமீ மழை பெய்துள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் காலிஃபோர்னியா காட்டுத்தீ குறித்து உலகமே பேசியது. ஒரு ஊரையே கபளீகரம் செய்த காட்டுத்தீ, பணக்காரர்கள், சாதாரண மனிதர்கள் வரை அனைவரின் வீடுகளையும் தீக்கிரையாகியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.