;
Athirady Tamil News

அமெரிக்க உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிர பிரிட்டனுக்கு தடை!

0

அமெரிக்க உளவுத்துறையால் பகிரப்படும் எந்த தகவலையும் உக்ரைனுடன் பகிரக் கூடாது என்று வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது.

உக்ரைன் போருக்கு அமெரிக்கா செய்த உதவிகளுக்கு கைமாறாக, உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைன் அதிபா் வெலோதிமீா் ஸெலென்ஸ்கி கடந்தவாரம் வெள்ளை மாளிகை சென்றிருந்தார்.

அப்போது அதிபர் டொனால்டு டிரம்புடன் நடைபெற்ற விவாதம் வாக்குவாதமாக மாறிய நிலையில், ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் அங்கிருந்து ஸெலென்ஸ்கி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில், உக்ரைனுக்கு அளித்துவந்த அனைத்து வகையான ராணுவ உதவிகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக திங்கள்கிழமை அறிவித்தார்.

ஆயுதங்கள் மட்டுமின்றி வான்வழித் தாக்குதல்களைக் கண்காணித்து எச்சரிப்பது, உளவுத் தகவல் தருவது ஆகியவற்றையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனின் உளவுத்துறையுடன் அமெரிக்க உளவுத்துறை பகிரும் தகவல்களை உக்ரைனுடன் பகிரவும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து மூன்று ஆண்டுகளாக பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பெறும் ரஷியாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிர்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவும் ‘உக்ரைனுக்கு வெளியிடக்கூடியவை’ என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில தகவல்களை பிரிட்டனுடன் பகிர்ந்து வந்தது. தற்போது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உளவுச் செய்திகளை உக்ரைனுக்கு பகிர தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கை போரில் அந்நாட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.