;
Athirady Tamil News

அணுசக்தி திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை: ஈரானுக்கு டிரம்ப் கடிதம்!

0

அணு ஆயுதம் தயாரிப்பதை ஈரான் நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடன்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் இணைந்து கொண்டுவந்த ஒப்பந்தத்தில் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

முதல்முறை டிரம்ப் பதவியேற்ற பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் பலவீனமானது எனக்கூறி அமெரிக்கா அதிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்கா வெளியேறி 1 ஆண்டு வரை அந்த ஒப்பந்தத்தைக் கடைபிடித்த ஈரான் பின்னர் அதில் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளைத் திரும்பப் பெற தொடங்கியது.

இந்நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அணு ஆயுத உற்பத்தி பற்றிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்துவரும் ஈரான் ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறியிருந்தது.

இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்கும் விதமாக புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாகப் பேசிய டிரம்ப், “நான் ஈரானுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால் நாம் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அது அவர்களுக்கு பயங்கரமானதாக இருக்கும். அவர்கள் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த 2020 இல் ஈரான் ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்க டிரோன் தாக்குதலால் கொல்லப்பட்டதற்கு எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையையும் ஈரான் எடுக்கப்படக்கூடாது என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

டிரம்ப்பின் கடிதத்திற்கு தற்போது வரை ஈரான் அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.