;
Athirady Tamil News

ஈஸ்டரையொட்டி மக்களை சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

0

ஈஸ்டர் திருநாளையொட்டி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று (ஏப். 20) மக்களை நேரடியாகச் சந்தித்தார்.

வாடிகன் சதுக்கத்தில் கூடிய மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், ஜெமிலி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் (88) அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 38 நாள்களாக மருத்துவமனையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாத இறுதியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

சுவாசக் கோளாறு காரணமாக பிப். 14ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்ற அவர், குணமடைந்து வாடிகன் திரும்புவதற்கு முன்பு மார்ச் இறுதி வாரத்தில் மக்களை சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து ஈஸ்டர் திருநாளையொட்டி, வாடிகனில் குவிந்த மக்களை நேற்று (ஏப். 20) சந்தித்து கையசைத்தார்.

உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டும் விதமாகவும், தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு ஆசி வழங்கும் விதமாகவும் வாடிகன் இதனைக் குறிப்பிட்டது.

இதனிடையே ஈஸ்டர் செய்தியாக, வாடிகன் மக்களை மட்டுமின்றி உலக மக்களின் நலனையும் போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். உலக அமைதி, ஆயுதக் குறைப்பு, உலகம் முழுவதுமுள்ள கைதிகளை விடுவிப்பது உள்ளிட்டவற்றுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

போராலும் முடிவில்லாத வன்முறையாலும் புனித பூமி காயப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிக அளவிலான பலிகள் மற்றும் பாதிப்பு ஏற்படுவதாக காஸாவையும் குறிப்பிட்டார்.

காஸா எல்லையில் உடனடி போர் நிறுத்தத்தம் வேண்டும் என முறையிடுவதாகவும், பிணைக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்று சேர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அமைதி, நீதி மற்றும் மனித உரிமைகளைக் காக்கும் வகையில் போப் பிரான்சிஸின் ஈஸ்டர் செய்தி அமைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.